'ஒரு கல்லில் இரண்டு மாங்காய்'... தமிழகத்தில் கள்ளுக் கடைகளை திறக்க எடப்பாடி அரசு அதிரடி முடிவு?
தமிழகத்தில் கள்ளுக் கடைகளை திறக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறக்க முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு அதிரடி முடிவெடுத்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் இழுத்து மூடப்பட்டன. இந்த கடைகளை குடியிருப்புகளில் திறக்க அரசு முடிவு செய்தது.

கடும் எதிர்ப்பு
ஆனால் தமிழகம் முழுவதும் குடியிருப்புகளில் மதுபான கடைகளைத் திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் கடைகள் தீ வைத்தும் எரிக்கப்பட்டுள்ளன.

கள்ளுக்கடைகள் திறப்பு
இதனால் தமிழக அரசு போதுமான வருவாய் இல்லாமல் நிலை குலைந்து போயுள்ளது. இதனை சரிகட்ட கள்ளுக்கடைகளை திறக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாம் அரசு.

அரசியல் லாபம்
கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும்; எதிர்காலத்திலும் அந்த சமூகங்களின் ஆதரவு தங்களுக்கு தொடரும் என்ற நம்பிக்கையில்தான் எடப்பாடி அரசு இப்படி ஒரு முடிவெடுத்துள்ளதாம்.

பிரசாரமும் ரெடி
மேலும் கள்ளுக்கடைகளை போதை தரும் பொருளாக பார்க்காமல் உணவின் ஒரு பகுதியாகவே பாருங்கள் என கூறி மக்களை சமாதானப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாம். இதற்காக கள் இயக்க தலைவர் நல்லுசாமி, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணணப்பாளர் சீமான் ஆகியோரை களமிறக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications