மழையில் ஆவணங்களை இழந்தவர்களுக்கு கவலை வேண்டாம்... நகல் சான்று பெற சிறப்பு முகாம்
சென்னை: மழை வெள்ளத்தில் பட்டா, நில ஆவணங்களை இழந்தவர்களுக்கு நகல் சான்றிதழ் வழங்குவதற்காக டிசம்பர் 14 முதல் 27 வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது நிலம் மற்றும் வீட்டு மனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரி வாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், நிலம், வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இழந்துள்ளனர். பொதுமக்களுக்கு அவற்றின் நகல்களை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, வருவாய் வட்டங்களிலும், கல்வி சான்றிதழ்களுக்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் வருகின்ற டிசம்பர் 14 முதல் 27 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இம்முகாம்களில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும், மத்திய அரசின் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று ஒரு வாரத்திற்குள்ளாக நகல் ஆவணங்களை கட்டணமின்றி வழங்குவர். சிறப்பு முகாம்களில் மட்டுமன்றி, பொதுமக்கள் விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மூலமாகவும் கொடுத்து நகல் ஆவணங்களைப் பெறலாம்.
இதுகுறித்து வணிக வரிகள் பதிவுத்துறை முதன்மைச் செயலர் நசீமுதீன் கூறியதாவது:
கனமழையால் பாதிக்கப்பட்டு பட்டா, நில ஆவணங்களை இழந்தவர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி அவற்றிற்கான நகல் சான்றுகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அவ்வாறு நகல் சான்று வழங்க இந்திய முத்திரைச் சட்டம் 1908-ன் படி மாநில ஆளுநரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கான ஒப்புதலை ஆளுநர் ரோசையா வழங்கியுள்ளார்.
அதையடுத்து, நில ஆவணங்களை இழந்தவர்களுக்கு கட்டணமில்லாமல் அவற்றிற்கான நகல் சான்றுகள் வழங்க வரும் டிசம்பர் 14 முதல் 27 வரை சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் விவரங்களை அளித்து நகல் சான்று பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
தமிழ்நாடு பத்திரப் பதிவுச் சட்டம் 1908 பிரிவு 57(5)-ன்படி, இச்சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிலம்/வீட்டுமனை சொத்து தொடர்பான பத்திர நகல்கள் யாவும் மூல ஆவணங்களாகக் கருதப்படும்.