"அம்மா" இருக்கும் இடமே தலைமைச் செயலகம்.. அப்பல்லோவிலிருந்து அதிர வைக்கும் ஜெயலலிதா!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா குணமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனையில் ஓய்வில் இருந்தவாறே அரசு மற்றும் கட்சிப் பணிகளை கவனித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் அறிவுரைப்படி நாளை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் டெல்லியில் நடைபெற இருக்கும் கூட்டம் தொடர்பாக மருத்துவமனையில் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்சனை தொடர்பாக தலைமை செயலாளர் பி.ராம மோகன் , அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் முதல்வரின் செயலாளர்களோடு ஆலோசனை நடத்தினார்.
உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி மத்திய நீர்வளத்துறை அமைச்சரக ஏற்பாட்டில் இரு மாநில தலைமை அதிகாரிகள் கூட்டம் நாளை டெல்லியில் நடக்கலாம் என்று கூறினார். இந்தக் கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச் சாமி, தலைமைச் செயலாளர் பி.ராம மோகனராவ், பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார்.
தமிழகத்தின் சார்பில் முன்னிருத்த வேண்டிய கருத்துக்களை முதல்வர் அதிகாரிகளுக்கு விளக்கினார். டெல்லி கூட்டத்தில் தலைமை செயலாளரால் வாசிக்கப்பட வேண்டிய தனது உரையினையும் முதல்வரே கூறியதாக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.