நடத்தை விதிமுறை அமலானது.. இனி தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பிக்க கூடாது: தேர்தல் அதிகாரி
சென்னை: தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்துவிட்டன. இனிமேல், மாநிலத்தில் அரசு என்று ஒன்று இருந்தாலும் கூட அனைத்து நிர்வாகத்தையும் ஏறத்தாழ தேர்தல் ஆணையமே நிர்வகிக்கும்.
தேர்தல் அறிவிப்பு வெளியானதும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து கட்சிகளும் கடைபிடிக்க வேண்டும். எந்த விதிமீறல்களிலும் ஈடுபட கூடாது. தமிழக அரசு புதிய உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக்கூடாது.
அரசுத்துறை செயலாளர்கள் தங்களது கோப்புகளில் எந்த திருத்தமும் செய்யக்கூடாது. எந்த ஒரு உத்தரவையும் முன்தேதியிட்டு சேர்க்கக்கூடாது. அதை உறுதிபடுத்த கோப்புகளில் நகலை தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது வெள்ள நிவாரணம் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இனி தேர்தல் ஆணையத்திடம் உரிய முறையில் விண்ணப்பித்து அனுமதி பெற்றே வெள்ள நிவாரண உதவிகளை வழங்குதல் வேண்டும்.
எந்த ஒரு முறைகேடும் நடைபெறாமல் தீவிரமாக கண்காணிப்பு செய்யப்படும். இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படையை உருவாக்கி இருக்கிறோம். எந்த காரணத்தை கொண்டும் அரசுக்கு சொந்தமான கார்களை, கட்சி நிகழ்ச்சிகளுக்கோ தேர்தல் பணிகளுக்கோ பயன்படுத்தக்கூடாது. அரசு கார்களின் பயன்பாடு கண்காணிக்கப்படும்.
வாக்காளர்களை திசை திருப்பும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க மாட்டோம். வாக்காளர்களுக்கு இலவசம் கொடுக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை உறுதிபடுத்த ஒவ்வொரு தொகுதியிலும் 3 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெறும்.
இன்றே வாகன சோதனை தொடங்க உள்ளது. ஓட்டுப்பதிவுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.