போக்குவரத்து ஊழியர்களே ஸ்டிரைக் வேண்டாம்.. முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு!
வேலைநிறுத்தம் அறிவித்துள்ள போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்களின் போராட்டத்தை கைவிடும் வகையில் 12ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நலத்துறை ஆணையம் அழைப்பு விடத்துள்ளது.
சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மே 12ம் தேதி தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
13வது ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும் போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 7 ஆயிரத்தை உடனடியாகத் திரும்ப வழங்க வேண்டும், பணி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க ரூ.1,500 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 15ம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்அறிவித்துள்ளன.
வேலைநிறுத்தத்தையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் போச்சுவரத்துத்துறை அமைச்சருடன் தொழிற்சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நலத்துறை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி மே 12ம் தேதி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை தனி அதிகாரி, நிர்வாகிகள், 10 போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்துத்துறை நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.