பக்கோடா விற்பது தப்பில்லங்க...கூடவே காளான், அலங்கார மீன்களையும் விக்கலாம்.. ஜெயக்குமாரின் அடடே ஐடியா
பக்கோடா விற்பது தவறல்ல, அதுவும் சுயவேலைவாய்ப்புதான் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: பக்கோடா விற்பனை செய்வது தவறு அல்ல, சுயவேலைவாய்ப்பு என்பது சிறப்பான விஷயம் என்று மோடி, அமித்ஷாவின் பக்கோடா கமென்ட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு பெருகவில்லையே என்ற டிவி சேனல் ஒன்றின்கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்த பிரதமர் மோடி, பக்கோடா விற்றால் கூட நாளொன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கலாம். அது வேலைவாய்ப்பு இல்லை என்பீர்களா என கூறியுள்ளார்.
இதுபோல் எம்பியான பிறகு முதல்முறையாக நேற்றைய தினம் லோக்சபாவில் அமித்ஷா பேசினார். அப்போது அவர் கூறுகையில் வேலை இல்லாமல் இருப்பதற்கு பக்கோடா விற்பது எவ்வளவோ மேல் என்று கூறியுள்ளார்.
மாணவர்கள் எதிர்ப்பு
சமூக வலைதளங்களிலும் மோடியின் கமென்ட்டுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெங்களூரில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்த இடத்துக்கு அருகே இளைஞர்கள் பட்டமளிப்பு ஆடை அணிந்து கொண்டிருந்தனர்.
மோடி பக்கோடா
அப்போது அங்கிருந்த மாணவர்கள் பக்கோடா விற்பனை செய்தனர். மேலும் மோடி பக்கோடா , அமித்ஷா பக்கோடா என்றும் விற்றனர். இதையடுத்து பெங்களூர் போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
மோடியே விற்று காமிங்க
இதுகுறித்து சீமான் கூறுகையில் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் பக்கோடா விற்று காண்பிக்கட்டும், அதை பார்த்துவிட்டு நாம் விற்கலாம். பக்கோடா விற்பதே சிறந்த தொழில் என்றால் நாட்டின் பிரதமராகவும், தேசிய கட்சியின் அகில இந்திய தலைவராகவும் ஆனது ஏன். இப்ப பக்கோடா விற்க சொல்லியாச்சு, அடுத்தது, பரோட்டா, சால்னாவை விற்க சொல்வார்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
தவறில்லை
மோடியின் பக்கோடா கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில் பக்கோடா விற்பது தவறல்ல.
சுயவேலைவாய்ப்பு என்பது சிறப்பான விஷயம்தானே. பக்கோடாவை போல் காளான், அலங்கார மீன்களையும் விற்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் அடடே ஐடியா கொடுத்துள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.