காவிரியில் கழிவுநீர் - தடை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு-அமைச்சர்களுடன் முதல்வர் ஜெ.ஆலோசனை!
சென்னை: காவிரியில் கழிவுநீர் கலப்பதை கர்நாடகா தடை செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர உள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
கர்நாடக சட்டமேலவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கதாகி, கர்நாடகத் தலைநகர் பெங்களூர் மற்றும் அதையொட்டிய பகுதிளிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
இது தமிழகத்தில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. கர்நாடகாவின் இந்த அடாவடித்தனத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் காவிரியில் கழிவுநீர் கலப்பதை கர்நாடகா அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஓரிரு நாட்களில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கைத் தாக்கல் செய்யும் என்று கூறப்படுகிறது.