கேரளா அடாவடி: முல்லைப் பெரியாறு அணைக்கு செல்ல முடியாமல் தமிழக அதிகாரிகள் தவிப்பு!
கம்பம்: கேரளா வனத்துறையின் அடாவடியால் முல்லைப் பெரியாறு அணைக்கு செல்ல முடியாமல் தமிழக அதிகாரிகள் தவித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது முதல் அணைப்பகுதிக்கு செல்லும் தமிழக அதிகாரிகளிடம் கேரளா வனத்துறை அடாவடியில் ஈடுபட்டு வருகிறது.

தமிழக அதிகாரிகளிடம் அடையாள அட்டை கேட்பது, அணைக்கு கையெழுத்திட்டு செல்லச் சொல்வது, படகுத் துறைக்குள் நுழைய விடாமல் காக்க வைப்பது, மராமத்துப்பணிக்கு கொண்டு செல்லும் பொருட்களை தடுப்பது என தொடர்ந்து கேரளா வனத்துறையினர் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கடந்த நவம்பர் 27-ந்தேதி முதல் ஜனவரி 2-ந்தேதி வரை தேக்கடி படகுத்துறையிலிருந்து பெரியாறு அணைக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் செல்லவில்லை. படகில் செல்லாமல் 50 கி.மீ தூரம் ஜீப்பில் வல்லக்கடவு வழியாக பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதிக்கு பொறியாளர்கள் சென்று வந்தனர்.
டிசம்பர் 18-ந் தேதி வல்லக்கடவு வனத்துறை சோதனை சாவடியில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் அணைக்கு செல்லும் 2 வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன.
தற்போது அணையில் ஒரு உதவிப்பொறியாளரும், தொழில்நுட்ப உதவியாளர் ஒருவர் மட்டுமே தங்கி உள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை வனவிலங்குள் அதிகம் உள்ள பகுதியில் 20 கி.மீ வரை நடந்து சென்று பொறியளார் ஒருவர் வாங்கி வருகிறார்.
இதுதொடர்பான அனைத்து தகவல்களையும் அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும், அரசின் நடவடிக்கைக்காக காத்திருப்பதாகவும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது முல்லை[ பெரியாறு அணையானது 25-க்கும் மேற்பட்ட கேரள போலீசார் மற்றும் கேரள வனத்துறையினரின் பிடியில் உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பல இடங்களில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக அதிகாரிகள் இல்லாமல் அணை பாதுகாப்பின்றி உள்ளது.
கடந்த 35 ஆண்டுகளில் இதுபோன்ற நிலை ஏற்பட்டதே இல்லை என தமிழக பொதுப்பணித்துறையினரும், அணை மீட்பு போராட்டக்குழுவினரும் மற்றும் விவசாய சங்கத்தினரும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications