ஜெயலலிதா ஒரு கொலு பொம்மை... தமாகா ஒரு கட்சியே அல்ல: இளங்கோவன்
சென்னை: ஜெயலலிதா கொலு பொம்மை போல உட்கார்ந்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் அவர் எந்த ஆக்கப்பூர்வமான திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஒரு கட்சியாகவே கருதவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் சேவாதள பிரிவின் மாநில செயற்குழு கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. அமைப்பின் தலைவர் குங்ஃபூ விஜயன் தலைமை வகித் தார். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங் கோவன், தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர், செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர், ஜே.எம்.ஆருண், சேவாதள பொறுப்பாளர் பியாரி ஜான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழக மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற காந்தி என்ற பொறியாளர், மின்சார வாரியத்தில் நடக்கும் ஊழல் தொடர்பாக ஆவண படம் ஒன்றை தயாரித்து திரையிட முயன்றார். அந்த திரைப்படத்தை திரையிடவிடாமல் தமிழக அரசு தடுத்தி நிறுத்தி உள்ளது. இது ஜனநாயக படுகொலையாகும். இந்த தடையை நீக்குவது தொடர்பாக காங்கிரஸ் சார்பில், நீதிமன்றம் போக உள்ளோம்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி எங்களிடம் பேசி, எத்தனை தொகுதிகள் கேட்கலாம் என்று கேட்டார். அதற்கு நாங்கள் பதிலளித்துள்ளோம். இன்று அல்லது நாளை திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும்.
ஊடகங்களில் வெளியான தேர்தல் கருத்துக் கணிப்புகளை நம்பவில்லை. ஊடக முதலாளிகள் தங்கள் கருத்துக்களை திணிக்கின்றனர். மக்கள் மனதை நாங்கள் அறிவோம் என்று கூறினார்.
ஜெயலலிதா விலக வேண்டும்
ஜெயலலிதா கொலு பொம்மை போல உட்கார்ந்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் அவர் எந்த ஆக்கப்பூர்வமான திட்டத்தை யும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் தற்போதே மின்வெட்டு கடுமையாக உள்ளது. தனக்கு மக்கள் நலனில் தனக்கு அக்கறை இல்லை என்பதை ஜெயலலிதா நிரூபித்துள்ளார். எனவே, அவர் அரசியலில் இருந்து விலக வேண்டும்.
வெங்கையா நாயுடு
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ‘ என்னால் முதல்வரை சந்திக்க முடிகிறது' ஆனால், மற்ற மத்திய அமைச்சர்களால் முதல்வரை சந்திக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். வெங்கையா என்றால் ‘சும்மா' என்று அர்த்தம். அதை பொருட்படுத்தப்பட விரும்பவில்லை.
முதல்வரை சந்திக்க முடியவில்லை
மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் 100 முறை முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டோம், ஆனால் சந்திக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர். அவர்கள், சொந்த, பந்தம் பற்றி பேச முதல்வரிடம் பேச அனுமதி கேட்கவில்லை. தமிழகத்தில் திட்டங்கள் குறித்து விவாதிக்க அனுமதி கேட்டனர். ஆனால் சந்திக்க அனுமதி வழங்கவில்லை.
தமாகா கட்சியில்லை
திமுக கூட்டணியில் தமாகா இடம் பெறாது என்று ஸ்டாலின் கூறிவிட்டார். தமாகாவை ஒரு கட்சியாகவே கருதவில்லை. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். சோனியாவும் ராகுலும் பிரச்சாரத்துக்காக தமிழகம் வருவார்கள்.
ஜனநாயகப் படுகொலை
மின்வாரிய முன்னாள் பொறியாளர் காந்தியின் ‘ஊழல் மின்சாரம்' என்ற ஆவணப் படத்தை வெளியிட அரசு தடை விதித்துள்ளது. இது ஜனநாயகப் படுகொலை என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
குஷ்பு குற்றச்சாட்டு
இளங்கோவனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு , முதல்வரை சந்திக்க முடியவில்லை என்ற மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா இதுவரை பதில் அளிக்கவில்லை. இதில் இருந்தே அவருக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என்பது தெரிகிறது. கடந்த 5 ஆண்டுகளில் வாக்களித்த மக்களையே சந்திக்காத ஜெயலலிதா, மத்திய அமைச்சர்களை எப்படி சந்திப்பார்? என்று கேட்டார்.