அதிமுக அரசு மீது "ஊழல் குற்றப்பத்திரிக்கை"... நாளை ஆளுநரிடம் சமர்ப்பிக்கிறது காங்கிரஸ்!
சென்னை: அதிமுக அரசுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தயாரித்துள்ள ஊழல் புகார் பட்டியலை நாளை ஆளுநரிடம் அளிக்கப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றன. ஊழல் புகார்களும் கிளம்ப ஆரம்பித்துள்ளன.
சமீபத்தில், பாமக சார்பில் ஒரு ஊழல் புகார் பட்டியல் ஆளுநரிடம் அளிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளது அக்கட்சி.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் ஒரு ஊழல் புகார்ப் பட்டியலை தயாரித்து வருகிறது. இந்தப் பட்டியல் தயாரிப்புப் பணி முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை ஊழல் புகார்ப் பட்டியல் ஆளுநரிடம் அளிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி கொடுத்து, முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நீதிமன்றத்தால் நான்காண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, தற்போது ஜாமீனில் இருக்கிறார்.
இந்திய வரலாற்றில் எந்த ஒரு முதல்வரும் இத்தகைய தண்டனையை பெற்றதில்லை என்கிற வகையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி சாதனை படைத்திருக்கிறார்.
லஞ்ச முயற்சிகளின் விளைவாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொடுத்த நெருக்கடி காரணமாக விவசாய செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொள்ள வேண்டிய கொடுமை நிகழ்ந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட ஊழல்கள், முறைகேடுகளின் முதல் பட்டியல் தொகுக்கப்பட்டு ஆளுநரிடம் நாளை மாலை 4 மணியளவில் வழங்கப்பட இருக்கிறது.
அதற்கு முன்பாக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கத்திற்கு அருகில் காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் செயல்வீரர்கள் பேரணியாக புறப்பட்டு சிந்தாதரிப்பேட்டை பழைய சித்ரா திரையரங்கம் அருகில் பேரணி நிறைவு பெறுகிறது. பிறகு காங்கிரஸ் தலைவர்கள் தமிழக ஆளுநரை சந்தித்து ஊழல் பட்டியலை வழங்குவார்கள் என்றார் இளங்கோவன்.
என் மீது போடப்படும் அவதூறு வழக்குகளை வரவேற்கிறேன். உண்மை விவரங்களை நீதிமன்றங்களில் சமர்ப்பிக்க அவதூறு வழக்கு உதவும்.
எல்லை தாண்டினால் சுடுவோம் என இலங்கை அமைச்சர் கூறியுள்ளார். அதை மத்திய அரசு கண்டிக்கவில்லை. மாநில அரசும் கண்டிக்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் இந்தப் பேச்சைக் கண்டிக்காதது வருத்தம் அளிக்கிறது. தமிழக மீனவர்களை மோடி அரசு கைவிட்டுவிட்டது என்றார் இளங்கோவன்