எந்த தகுதியில் சாமி இலங்கைக்குப் போனார்?.. கேட்கிறது தமிழக. காங்கிரஸ்
சென்னை: எந்த அடிப்படையில் சுப்பிரமணியம் சுவாமி இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்டார் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் தமிழர் பகுதிகளின் மறு சீரமைப்பு தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் சுப்பிரமணியம் சாமியின் இலங்கை பயணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. என்ன அடிப்படையில், எந்தத் தகுதியில் அவர் இலங்கை சென்றார் என்பதை அவர் சார்ந்த பாஜக தலைமையிலான மத்திய அரசு விளக்க வேண்டும். அவரது தகுதி என்ன என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் ஐந்து பேரை கஞ்சா வைத்திருந்ததாக கூறி பொய்யான வழக்குப் போட்டு இலங்கை போலீஸார் கைது செய்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக்காலத்தில் இதுபோன்று நடந்ததில்லை. இதுபோன்ற விவகாரங்களை ராஜபக்சே அரசிடம் மத்திய அரசு தீவிரமாக எடுத்துச் சென்று கைது செய்யப்பட்டவர்களை விடுவித்துள்ளோம்.
அதேபோல இப்போதும் மத்திய அரசு நடந்து கொண்டு, அங்கு சிக்கியுள்ள மீனவர்களை விடுவித்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.