இன்றே கடைசி... இனி ‘பூத் ஸ்லிப்’ வழங்கப்படமாட்டாது!- தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழகம், புதுவையில் சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் எனப்படும் வாக்காளர் அடையாளச் சீட்டு வழங்குவது இன்றே கடைசி என்றும் இனி வழங்கப்பட மாட்டாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், "தமிழகம் முழுவதும் இதுவரை 61 சதவீத ‘பூத் ஸ்லிப்'கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 40 சதவீதம் தான் வழங்கப்பட்டுள்ளன. எனவே ‘பூத் ஸ்லிப்' வழங்குவதற்கான கடைசி தேதி இன்று (புதன்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று ‘பூத் ஸ்லிப்' வழங்கி வருகிறார்கள். அவற்றை வாக்காளர்கள் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
வீடுகளில் ஆட்கள் இல்லை என்று திருப்பி கொண்டு வரப்படும் ‘பூத் சிலிப்'புகள் சீல் வைத்து அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். வீடு தேடி கொண்டு வந்து கொடுக்கப்படும் ‘பூத் ஸ்லிப்'புகளை வாக்காளர்கள் வாங்காவிட்டால் அவர்களுக்கு வாக்குச்சாவடிகளில் ‘பூத் ஸ்லிப்'புகள் வழங்கப்படமாட்டாது.
இதற்கு முன்பு ‘பூத் ஸ்லிப்'புகள் கிடைக்காவிட்டால் அதை வாக்குச்சாவடி முன்பு தேர்தல் பணியாளர்கள் வினியோகிப்பார்கள். ஆனால் இந்த தேர்தலில் வாக்குச்சாவடி முன்பு ‘பூத் ஸ்லிப்' வழங்கப்படமாட்டாது.
இதே போல அரசியல் கட்சியினரும் வாக்குச்சாவடி முன்பு மேஜை, நாற்காலி போட்டு ‘பூத் ஸ்லிப்'புகள் வழங்குவதற்கு அனுமதி கிடையாது. எனவே ‘பூத் ஸ்லிப்' கிடைக்காதவர்கள் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ள ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம். ‘பூத் ஸ்லிப்'பில் வாக்காளர் பெயர், புகைப்படம், முகவரி மற்றும் பாகம் எண், வரிசை எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். அதைப் பார்த்ததும் வாக்காளரின் பெயர் பட்டியலில் இருந்து உடனடியாக எடுக்கப்படும்," என்றார்.