தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று பெய்வதே கடைசி மழையாம்.. சொல்கிறார் "வெதர்மேன்"!
தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று பெய்வதே கடைசி மழை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று பெய்வதே கடைசி மழை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. நேற்று முழுவதும் பெரும்பாலான நேரம் தூறிக்கொண்டே இருந்தது.
இரவு நேரத்தில் மட்டும் அவ்வப்போது மிதமான மழை பெய்தது. இன்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
நல்ல மழை பெய்யும்
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். நாளை முதல் மழை குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுவே கடைசி மழை
மேலும் வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் இன்று பெய்வதே கடைசி மழையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த காற்றழுத்த தாழ்வுநிலை வடக்கு நோக்கி நகர்வதால் இதனால் இனி தமிழகத்திற்கு மழை கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரும் மேகக்கூட்டம்
இரவு வரை சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். சென்னை கடற்பகுதியில் நேற்று இரவு இருந்ததுபோன்றே பெரும் மேகக்கூட்டம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
காற்றழுத்தம் நகர்ந்தால்
ஆனால் இந்த சூழ்நிலை வித்தியாசமானது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். காற்றழுத்தம் மேல் நோக்கி நகரும் போது நமக்கு மேற்கே உள்ள மேகக்கூட்டம் கீழே நகரும் என்றும், அடுத்துள்ள மேகக்கூட்டம் சென்னைக்கு மழையை தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குளிரான நாள்
இன்று வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸ் தான் இருக்கும் என்றும் மிக குளிரன நாளாக இது இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றிரவு நல்ல மழை பெய்ததாகவும், இன்று சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம்
நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் அதிக மழையை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.