பொங்கலுக்கு எல்லா ரயிலும் “புல்” - சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த முன்பதிவு டிக்கெட்டுகள்
சென்னை: சென்னையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த ஊரிலேயே பண்டிகையை கொண்டாட விரும்புவர். பயணம் செய்வதற்கு வசதியாக ரயில் பயணம் இருப்பதால் பெரும்பாலானோர் விரும்புவது ரயில் பயணத்தைத்தான்.

பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 12 ஆம் தேதி ரெயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது.
ஆனால் எதிர்பார்த்த அளவு முன்பதிவு நடைபெறவில்லை. டிக்கெட் கவுண்ட்டர்களிலும் கூட்டம் அதிகமாக இல்லை. இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்தவர்களும் அதிக ஆர்வம் காட்டவில்லை. அதிகபட்சமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,268 காலி இடங்கள் இருந்தன.
நேற்று ஜனவரி 13 ஆம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பல ரயில்களில் 2 ஆம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்வதற்கான முன்பதிவு முடிந்தது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் காத்திருப்போர் பட்டியல் 296 ஆகவும், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 247 ஆகவும், அதிகபட்சமாக பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை 317 ஆகவும் உள்ளன. குருவாயூர், திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது.
நீலகிரி, ஏற்காடு, சேலம் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியலின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளன. பெரும்பாலும் இரவில் புறப்படும் ரயில்களில் தான் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்து விட்டது. பகலில் புறப்படும் சில ரயில்களில் காலி இடங்கள் உள்ளன.
இன்று பொங்கலுக்கு முந்தைய தினமான 14 ஆம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு தொடங்குகிறது. ஏராளமானோர் தங்களது வீட்டில் இருந்த படியும், அலுவலகங்களில் இருந்த படியும் ஆன் லைனில் முன்பதிவு செய்ததால் டிக்கெட் கவுண்ட்டர்களில் கூட்டம் அதிகமாக வரவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆகையால் டிக்கெட் கவுண்ட்டர்களில் முன்பதிவு செய்ய வந்த ஒரு சிலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.












Click it and Unblock the Notifications