திருநங்கை என்பதால் போலீஸ் உடல் தகுதி தேர்வில் பங்கேற்க தடை!
மூன்றாம் பாலினத்தவர் என்பதால் சீருடைப் பணியாளர் தகுதித் தேர்வில் அனுமதிக்கப்படாததை எதிர்த்து திருநங்கை நஸ்ரியா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை : சீருடைப் பணியாளர் தேர்வில் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து பிதிக்கப்பட்ட திருநங்கை நஸ்ரியா மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல்வல் செய்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன், உடலில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறியுள்ளார். அவரது பெயரை நஸ்ரியா என்று மாற்றியுள்ளார் ஜெகதீஸ்வரன்.
பிளஸ் 2 முடித்துவிட்டு, காரைக்குடி அழகப்பா பல்கலையில் தொலைநிலைக் கல்வி வழியாக, பி.ஏ., படித்துள்ளார். இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன் பணிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. முதற்கட்டமாக நடந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைந்ததையடுத்து உடல் தகுதி தேர்வு ராமநாதபுரத்தில் ஜூலை 31ல் நடந்தது.
பாலின சோதனை தேர்வில் மருத்துவ சான்றை சமர்ப்பிக்கவில்லை. மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள், எனக்கு, 'திருநங்கை' என சான்றிதழ் அளித்தனர். இதை சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலரிடம் சமர்ப்பித்தேன்; ஆனால் அவர்கள் அதனை நிராகரித்து தேர்வில் தகுதி நீக்கம் செய்துள்ளனர்.
இதனையடுத்து நஸ்ரியா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக அரசு 3-ம் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்காக தனியாக விண்ணப்பத்தில் இடம் ஒதுக்கியுள்ளது. எனவே தன்னை காவலர் உடல் தகுதித்தேர்வில் கலந்து கொள்ளவிடாமல் நிராகரித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, காவலர் காலிப்பணியிடங்களில் தனக்கு ஒரு பணியிடம் ஒதுக்க மனுவில் நஸ்ரியா கோரிக்கை விடுத்துள்ளார்.
உடல் தகுதி தேர்வுக்கு அனுமதிக்கவும் உத்தரவிடக் கோரிய திருநங்கை நஸ்ரியாவின் மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய தலைவரிடம் விவரம் கேட்டுள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.