அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. ஸ்டிரைக்கில் குதித்த தமிழக அரசு பஸ் ஊழியர்கள்.. பயணிகள் அவதி!
ஊதிய உயர்வு தொடர்பாக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதால் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : ஊதிய உயர்வு தொடர்பாக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதால் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 2.57 சதவிகித ஊதியம் வழங்க அரசு ஒப்பு கொள்ளும் வரை வேலைநிறுத்தத்தை பின்வாங்கப் போவதில்லை என்று தொழிற்சங்கத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 % ஊதியம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்தன.
முதலில் 2.40% மட்டுமே தர முடியும் என்று சொன்ன அரசு பின்னர் 2.44% மட்டுமே தர முடியும் என்று கூறியதால் அதிருப்தியடைந்த தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். அமைச்சருடனான ஆலோசனைக்குப் பின்னர் சிஐடியூ தொழிற்சங்க செயலாளர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.

சம ஊதியம் இல்லை
மேலும் அவர் கூறுகையில், மாநில அரசு தனக்கு கீழ் இருக்கும் வேறுவேறு துறைகளின் கீழ் பணியாற்றுபவர்களையும் போக்குவரத்து ஊழியர்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் லாரி ஓட்டுபவர்களாக இருப்பவர்களை விடவே பேருந்து ஓட்டுநர்களின் சம்பளம் குறைவு.

2.57% தர வேண்டும்
அரசு அறிவித்திருக்கிற 2.57% மட்டுமே தர வேண்டும் என்று தான் நாங்கள் கேட்கிறோம். 2.44% உயர்வு என்பதை எந்த காலத்திலும் ஏற்கவே முடியாது. கடுமையாக உழைப்பவர்களுக்கு ஏன் இந்த ஊதிய குறைவு தண்டனை என்பது தான் எங்களின் கேள்வி அதற்கு அரசிடம் பதில் இல்லை.

வேறு வழியில்லை
ஊதிய உயர்வு தர நிதித்துறை தடுக்கிறது, ஆனால் போக்குவரத்துத் துறையில் வருமானத்தை பெருக்க எந்த ஆலோசனையும் தெரிவிக்கவில்லை. அரசின் கஷ்டமே தாங்க முடியாது என்றால், குடும்பம் நடத்த எவ்வளவு சிரமமாக இருக்கும். வேலைநிறுத்தத்தில் எங்களுக்கும் மகிழ்ச்சியில்லை, நாங்கள் வேலைநிறுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் வேலைநிறுத்தம் தொடரும், பிரச்னை தீரும் வரை வேலைநிறுத்தம் பின்வாங்கப்படமாட்டாது.

95 % போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்
மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கவலை அரசுக்கும் இருக்க வேண்டும், வேலைநிறுத்தத்திற்கு எந்த விதத்திலும் தொழிற்சங்கம் பொறுப்பேற்காது. வேலைநிறுத்தத்தில் 10 தொழிற்சங்கத்தினர் பங்கேற்கின்றனர். சுமார் 95 சதவிகித போக்குவரத்து ஊழியர்கள் இந்த தொழிற்சங்கங்களில் உள்ளனர் என்றும் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications