நிலநடுக்கம்: குலுங்கிய அடையாறு, போரூர், திருவல்லிக்கேணி, தி. நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம்
ஒடிஷா மாநிலத்தில் உள்ள பாராதீப் துறைமுகத்தில் இருந்து 60 கிமீ தொலைவில் வங்கக் கடலில் 10 கிமீ ஆழத்தில் புதன்கிழமை இரவு 9.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் கிழக்கு, வட இந்தியா மற்றும் சென்னையில் சில இடங்களில் அதிர்வு உணரப்பட்டது.
ஒடிஷா, ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் மத்திய பிரதேசத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. மேலும் உத்தர பிரதேசத்திலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
சென்னையில் அடையாறு, போரூர், திருவல்லிக்கேணி, தி. நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களுக்கு ஓடி வந்தனர்.
ஆயிரம் விளக்கு காவல் குடியிருப்பு கட்டிடம் லேசாக குலுங்கியது. மேலும் சென்னை ஸ்டான்லி மகப்பேறு மருத்துவமனையின் 8 மாடி கட்டிடத்தில் 5 மற்றும் 6வது மாடியில் இருந்த நோயாளிகள் நிலநடுக்கத்தை உணர்ந்து வெளியே வந்துவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து கட்டிடத்தில் இருந்த அனைத்து நோயாளிகளும் வெளியே வந்தனர்.
மெரினா கடற்கரை மணலில் தினமும் பொதுமக்கள் தூங்குவது வழக்கம். நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுமோ என்ற பயத்தால் கடற்கரை மணலில் தூங்கியவர்களை அவர்களது உறவினர்கள் வந்து எழுப்பி அழைத்துச் சென்றனர்.