அரசு மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சலில் பலியானவரின் உடலை உறவுகளே தூக்கிச் சென்ற அவலம்- வீடியோ
திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சலால் இறந்த பெண்ணின் உடலை அவரது கணவரும் மகனுமே ஆம்புலன்ஸுக்குத் தூக்கிச் சென்ற கொடுமை நிகழ்ந்துள்ளது.
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சலால் இறந்த பெண்ணின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை ஊழியர்கள் மறுத்ததால், அவரது கணவரும் மகனுமே தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டு, மக்களை அச்சுறுத்தி வருகிறது. சேலம் திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் மிகத் தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது திருச்சியிலும் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் மணப்பாறையைச் சேர்ந்த சின்னப்பொண்ணு என்பவர் நேற்று டெங்குக் காய்ச்சலால் இறந்தார். அவர் இறந்து போனபின்பும் அதே படுக்கையில் 6 மனிநேரம் கிடத்தி வைக்கப்பட்டு இருந்தார். அந்த உடல் அருகே அங்கு சிகிச்சை பெற்று வந்த மற்ற நோயாளிகள் இருந்தனர்.
அதன்பின்பு, வெகுநேரம் கழித்து வந்த ஆம்புலன்ஸில் இறந்த உடலை தூக்கிச் சென்று வைக்க அரசு மருத்துவமனை ஊழியர்கள் இல்லாத காரணத்தால், இறந்தவரின் கணவரும் மகனுமே உடலைத் தூக்கிச் சென்று வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.