"திஹார் கொண்டான்" தினகரனுக்காக செம கூட்டம்.. குவித்து அதகளப்படுத்தியது யார் தெரியுமா?
அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறையில் இருந்த அனுபவத்தை மறக்கவே அவரை திணறடிக்கும் வகையில் வெற்றிவேல் தொண்டர்கள் படையை இறக்கினாராம்.
சென்னை: லஞ்சப் புகாரில் சிறை சென்று திரும்பியுள்ள டிடிவி தினகரனுக்கு சென்னை விமான நிலையம், அடையாறு என இரண்டு இடங்களிலும் தொண்டர்கள் படையை குவித்து தனத்து விசுவாசத்தை காட்டியுள்ளார் வெற்றிவேல்.
முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்ச பேரம் பேசிய குற்றச்சாட்டில் சிறை சென்று ஜாமினில் விடுதலையாகி இன்று சென்னை திரும்பியுள்ளார் தினகரன். சிறைக்கு செல்லும் முன்னர் கட்சியில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக கட்சியில் இருந்து ஒதுங்குகிறேன் என்று அறிவித்தார் தினகரன்.
ஆனால் விடுதலையாகி வெளியே வந்ததும் டெல்லி விமான நிலையத்திலேயே தனது அரசியல் பயணம் குறித்த கேள்விக்கான பதிலை போட்டுடைத்தார். கட்சியில் தானே நான் இருக்கிறேன், அப்புறம் கட்சிப் பணி செய்யமாட்டேனா என்று கூறி அனைவரின் எதிர்பார்ப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தோப்பு அணி சந்திப்பு
சிறையில் வெளிவந்த தினகரனை தோப்பு வெங்கடாசலம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட 8 பேர் டெல்லிக்கே போய் பார்த்துவிட்டு பிளைட் ஏற்றி பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த 8 பேர் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தினகரன் எங்களுக்கு செய்து கொடுத்த சத்தியம் என்னாச்சு என்று முதல்வரை தலைமைச் செயலகத்திலேயே சந்தித்து குடைச்சல் கொடுத்தனர் என்பது வேறு கதை.

அள்ளிய கூட்டம்
ஜெயில்லேருந்து வரும் "அண்ணன்" மனம் சோர்ந்து விடக்கூடாது என்று அவர் வரும் எல்லா வழியிலேயும் தொண்டர்களை குவித்துள்ளனர். வடசென்னை வெற்றிவேல் மற்றும் தென்சென்னை கலைராஜன் ஆகியோர்தான் இந்தக் கூட்டத்தைக் கூட்ட முக்கியக் காரணமாம்.

உற்சாக வரவேற்பு
தினகரன் கார் சென்னை அடையாறு வீட்டுக்குக் கிளம்ப தெரு முனையில் இருந்தே தாரை, தப்பட்ட மேளம், குத்தாட்டம் என அடையாறே அல்லோலப்பட்டு விட்டதாம். தினகரனின் வீடு இருக்கும் தெருவிற்குள் நுழையவே முடியாத அளவிற்கு தொண்டர்கள் மாலைகள் போட்டும், கை கொடுத்தும் உற்சாகப்படுத்தி விட்டனர்.

ஆலோசனை
டிடிவி தினகரனை சந்திப்பதற்காக அதிமுகவின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், வெற்றிவேல் உள்ளிட்டோர் அவரது வீட்டில் ரெடியாக காத்திருந்தனர். வீட்டிற்கு சென்றவுடன் தினகரன் இவர்களுடன் ஆலோசனையும் நடத்தினாராம். ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள தினகரன் சென்னை திரும்பும் போது எல்லா சோகத்தையும் மறந்து மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று வெற்றிவேல் போட்ட மாஸ்டர் பிளான் தானாம் இந்த தொண்டர் படை.
சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு டயர்டாகி வந்தவராச்சே.. குளிர்விக்கத்தானே வேண்டும்!












Click it and Unblock the Notifications