சபாநாயகர் கொடுத்த கெடு முடிந்தது... 18 எம்எல்ஏக்கள் நேரில் வரமுடியாத காரணம் என்ன தெரியுமா?
டிடிவி தினகரன் ஆதரவு எம்எம்எல்ஏக்கள் ஆஜராக சபாநாயகர் விதித்த கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டது. சபாநாயகரிடம் கர்நாடகா போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் அளித்த காலக் கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் 18 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்தது.
இதனிடையே தமிழக போலீசாரால் பிரச்சினை உள்ளதால் தமிழகம் வருவதற்கு கர்நாடக போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கேட்டுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கையில்லாததால் அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.
சபாநாயகர் நோட்டீஸ்
இதனிடையே, தமது கவனத்துக்கு கொண்டு வராமல் தன்னிச்சையாக 19 எம்எல்ஏக்களும் ஆளுநரை சந்தித்ததாக சபாநாயகரிடம் கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் கொறடாவின் புகாருக்கு உரிய பதிலளிக்குமாறு 19 எம்எல்ஏக்களும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
ஜக்கையன் விளக்கம்
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தினகரன் ஆதரவாளராக இருந்த எம்.எல்.ஏ. ஜக்கையன் எடப்பாடி அணிக்கு தாவினார். தினகரன் கொடுத்த அழுத்தம் காரணமாகவே ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததாக கூறினார் ஜக்கையன்.
கெடு முடிந்தது
18 எம்எல்ஏக்கள் தற்போது கர்நாடகாவின் குடகு ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். சபாநாயகரை தங்கதமிழ்ச் செல்வனும், வெற்றிவேலும் மட்டுமே இதுவரை சந்தித்துள்ளனர். சபாநாயகரின் நோட்டீஸுக்கு பதிலளிக்கும் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. எனினும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளிக்கவில்லை.
தகுதி நீக்கம்
சபாநாயகரின் நடவடிக்கைக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் ஆஜரான தமிழக தலைமை வழக்கறிஞர் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்றைய தினம் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இடைக்கால பதில்
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ராஜா செந்தூர் பண்டியன், 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பாகவும் இடைக்கால பதில் கொடுத்துள்ளோம். எந்த சூழலில், எந்த அடிப்படையில் ஆளுநரை பார்த்து கடிதம் கொடுத்துள்ளோம் என்று அதில் விளக்கமாக கூறியுள்ளோம். இதை அவர் ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இறுதி பதில்
அதே சமயம், சில ஆவணங்களை நாங்கள் கேட்டுள்ளோம். அவற்றை கொடுத்த பிறகு இறுதி பதில் தருகிறோம் என்று கூறியுள்ளோம். விசாரணையின் போது யூகத்தில் பதில் அளிக்க முடியாது என்பதால், அதற்கான ஆவணங்களை கேட்டுள்ளோம்.
நீதிமன்ற உத்தரவு
இந்த பிரச்சினை வழக்கில் உள்ளது. எனவே இதில் பதில் அளிப்பது சரியாக இருக்காது. சட்டத்திற்கு சம்பந்தப்பட்ட விஷயங்களை சபாநாயகரிடம் கொடுத்துள்ளோம். அவற்றை பரிசீலனை செய்வதாக சபாநாயகர் கூறினார். சபாநாயகர் முடிவில் தலையிடலாம் என்ற நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. அவை வழக்குக்கு வழக்கு மாறும்.
துரோகம் செய்யவில்லை
முதல்வர் ஒரு ஆவணம் தாக்கல் செய்துள்ளார். அந்த ஆவணம் அவருக்கு எப்படி போனது?. அது தொடர்பான ஆவணங்களையும் எங்களுக்கு தர வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். எம்எல்ஏக்கள் யாரும் கட்சிக்கு துரோகம் செய்யவில்லை, கட்சியை விட்டு போகவில்லை, தலைமைக்கு கட்டுப்பட்டுதான் முடிவெடுத்தோம் என்பதை தெரிவித்துள்ளோம். அந்த ஆவணங்களை தந்தால் இறுதி விசாரணைக்கு வந்து ஆஜராக தயாராக இருக்கிறோம்.
பாதுகாப்பு வேண்டும்
தமிழக போலீசாரால் பிரச்சினை உள்ளது. எனவே இங்கு வருவதற்கு கர்நாடக போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டுள்ளோம். அதை மனுவாக கொடுத்தால் பரிசீலிப்பதாக கூறியுள்ளார். அதை மனுவாகவும் கொடுத்துள்ளோம். யார் மிரட்டினார்கள் என்று கர்நாடக போலீசில் செந்தில் பாலாஜி புகார் கொடுத்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் யார் யார்?
பூந்தமல்லி தொகுதி டி.ஏ.ஏழுமலை பெரம்பூர் தொகுதி பி.வெற்றிவேல் திருப்போரூர் மு.கோதண்டபாணி, சோளிங்கர் என்.ஜி.பார்த்திபன், குடியாத்தம் தொகுதி சி.ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் தொகுதி ஆர்.பாலசுப்பிரமணி, பாப்பிரெட்டி பட்டி பெ.பழனியப்பன், அரூர் ஆர்.முருகன், நிலக்கோட்டை ஆர்.தங்கதுரை, அரவக்குறிச்சி வி.செந்தில்பாலாஜி, தஞ்சாவூர் எம்.ரெங்கசாமி,மானாமதுரை சோ.மாரியப்பன் கென்னடி, ஆண்டிபட்டி தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் கா.கதிர்காமு, சாத்தூர் எஸ்.ஜி.சுப்பிரமணியன், பரமக்குடி எஸ்.முத்தையா, விளாத்திக்குளம் கு.உமா மகேஸ்வரி, ஒட்டப்பிடாரம் ஆர்.சுந்தர்ராஜ் ஆகியோரின் பதவி தப்புமா என்பது இன்று தெரியும்.