ஜெயா டிவியில் ஐடி ரெய்டு செய்தி போடக்கூடாதா?... பேட்டியின் போதே போனில் கொந்தளித்த தினகரன்!
ஜெயா டிவியில் வருமானவரி சோதனை செய்தி போடக்கூடாது என்று யார் சொல்வது என்று பேட்டியின் போதே டிடிவி தினகரன் போனில் கொந்தளித்தார்.
Recommended Video
சென்னை : ஜெயா டிவியில் வருமானவரி சோதனை பற்றிய செய்தியோ, பேட்டியோ போடக் கூடாது என்று யார் சொன்னது என்று பேட்டியின் போதே டிடிவி தினகரன் போனில் கொந்தளித்தார்.
சசிகலா குடும்பத்தினர் கையில் இருக்கும் ஜெயா டிவி மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழ் அலுவலகத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை குறித்து ஜெயா டிவி தொடர்ந்து செய்தியை ஒளிபரப்பி வருகிறது. ஆனால் ஜெயா டிவி செய்திகளை வெளியிட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தினகரனின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது.
வருமான வரி சோதனை குறித்த காட்சிகளை மட்டுமே ஜெயா டிவியில் ஒளிபரப்பலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். இது தொடர்பான பேட்டியையோ, தினகரனின் பேட்டியையோ அல்லது விவாதங்களையோ நடத்த அவற்றை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக தினகரனிடம் தெரிவித்தார்.
இதனால் கோபமடைந்த தினகரன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போதே ஜெயா டிவி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு எதற்காக வருமான வரி செய்தி போடக் கூடாது என்று சொல்கிறார்கள் என்று கேட்டார். பச்சைமுத்து வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்ற போது புதிய தலைமுறையில் செய்தி போட்டார்களே அப்போது ஏன் கேட்கவில்லை. ஏதாவது பிரச்னை செய்தால் சொல்லுங்கள் வக்கீலை அனுப்புகிறேன்.
அதிகாரிகளின் பெயர்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இவர்களை கோர்ட்டில் நிறுத்தி கேள்வி கேட்போம். கடைசியில் கையெழுத்து போட்டுவிட்டு செல்வார்கள் அல்லவா அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தினகரன் காட்டமாக தொலைபேசியில் பேசினார்.