234 தொகுதிகளிலும் போட்டி... ஊழலற்ற ஆட்சி - தினகரனுக்கு எதிராக களமிறங்கும் பாஸ்கரன்
எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டன்தான், மக்கள் மனதில் தலைவராக நிற்க முடியும் என்று டிடிவி தினகரன் தம்பி பாஸ்கரன் கூறியுள்ளார்.
Recommended Video
தஞ்சை: நான் தலைமை பொறுப்பேற்க காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று டிடிவி தினகரனின் தம்பி பாஸ்கரன் கூறியுள்ளார். பந்தயத்தில் யார் முந்துகின்றனரோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழலற்ற ஆட்சி அமைப்பேன் என்றும் தலைவா பாஸ்கரன் பாசறையை சேர்ந்தவர்கள் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார்கள் என்றும் பாஸ்கரன் கூறியுள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கான பணியை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பயணம் செய்து வருகிறார் தினகரன். இந்த நிலையில் டிடிவி தினகரனின் சகோதரர் பாஸ்கரனும் தனியாக சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கப் போவதாக கூறியுள்ளார். நான் தலைமை பொறுப்பேற்க காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஸ் என்கிற பாஸ்கரன்
சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி பாஸ்கரன் தலைவன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா டிவியில் பொறுப்பில் இருந்த இவர், பிறகு அதிலிருந்து ஒதுங்கி அமைதியாக இருந்தார். ஜெயா டிவியில் வேலை பார்த்த போதே மோசடி புகாரில் சிக்கி பாளையங்கோட்டை சிறையில் 8 மாதம் இருந்துள்ளார்.
பாஸ்கரன் அரசியல் ஆசை
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் அவரால் ஒதுக்கி வைக்கப்பட்ட பலரும் அரசியலில் தலை காட்டி வருகின்றனர். டிடிவி தினகரன் எம்எல்ஏவாக வெற்றி பெற்று கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற முயற்சி செய்து வரும் நிலையில் அவருக்கு எதிராக அவரது குடும்பத்தினர் சொந்த சகோதரர் பாஸ்கரனே முயற்சி செய்து வருகிறார்.
காலம் பதில் சொல்லும்
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கரன், டி.டி.வி. தினகரனுக்கு என்று ஒரு பாணி உள்ளது. எனக்கென ஒரு பாணி உள்ளது. அந்த பாணியில்தான் நானும் பொதுமக்களை சந்தித்து வருகிறேன். நான் தலைமை பொறுப்பேற்க காலம்தான் பதில் சொல்ல வேண்டும். பந்தயத்தில் யார் முந்துகின்றனரோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் என்று கூறினார்.
உண்மையான தொண்டன்
எனது குருவான எம்.ஜி.ஆரின் ஆன்மா யாரை தூக்கி நிறுத்துகிறதோ அவர்கள்தான் தலைவர்களாக முடியும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வமும் எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் இல்லை. அதனால்தான் அவர்கள் யாரிடமோ சரணடைந்துள்ளனர். சூழ்நிலை காரணமாக 2 பேரும் அதிகளவில் சம்பாதித்துவிட்டனர்.
ஊழலற்ற ஆட்சி
இன்றைய தமிழகம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. அதற்காகதான் நான் எனது பாசறையான ‘தலைவா பாஸ் பாசறையில் அதிகளவில் இளைஞர்களை சேர்த்துள்ளேன். மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். இளைஞர்களை கொண்டு ஊழலற்ற ஆட்சி அமைக்கவுள்ளேன். அதிமுக சிதறி கிடக்கிறது. எனது தலைமையில் எல்லோரையும் ஒன்றாக இணைத்து அதிமுகவை வழிநடத்துவேன்.
234 தொகுதிகளிலும் போட்டி
வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் எனது பாசறையை சேர்ந்தவர்கள் போட்டியிடுவார்கள் என்றும் பாஸ்கரன் கூறியுள்ளார். டிடிவி தினகரனுக்கு எதிராக தாய்மாமன் திவாகரன் ஒருபக்கம் களமிறங்கியுள்ள நிலையில் தம்பி பாஸ்கரனும் கச்சை கட்சியுள்ளது தினகரனுக்கு குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.