ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் டிடிவி தினகரன், கருணாஸ் பங்கேற்கவில்லை
ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவில் டிடிவி தினகரன் , கருணாஸ் பங்கேற்கவில்லை.
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவில் டிடிவி தினகரன், கருணாஸ் ஆகியோர் பங்கேற்கவில்லை.
சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. படத்தை பிரதமர் மோடி கலந்து கொண்டு திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் அதுகுறித்து அவர் தேதி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் காலதாமதத்தை தவிர்க்க தமிழக அரசே அவரது உருவப்படத்தை திறந்து வைக்க முடிவு செய்து இன்று அந்த விழாவை சட்டசபையில் நடத்தியது. இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.
நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை திறக்கக் கூடாது என்பது எதிர்க்கட்சிகளின் வாதம். எனினும் எதிர்ப்பையும் மீறி அவரது படம் திறந்து வைக்கப்பட்டது.
7 அடி உயரம், 5 அடி அங்குலத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் அவரது படம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் இருக்கைக்கு எதிராக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிடிவி தினகரனும், அதிமுகவின் சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸும் கலந்து கொள்ளவில்லை.
ஜெயலலிதாவின் வளர்ப்பு பிள்ளையாக தன்னை அடிக்கடி கூறிக் கொள்ளும் டிடிவி தினகரன் கலந்து கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போதே ஜெயலலிதாவை வேறு கட்சி தலைவராக பார்க்கத் தொடங்கிவிட்டாரா என்ற கருத்தும் எழுந்துள்ளது.
ஒரு தரப்பினர் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்காததால் அவர் கலந்து கொள்ளாமல் இருக்கலாம் என்று கூறுகின்றனர். அதுபோல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸும் இந்த விழாவில் கலந்து கொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.