ஏரிகளை தூர்வாரச் சொன்னால் அரசு கஜானாவை தூர்வாரிய எடப்பாடி... தினகரன் புகார்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ஏரி,குளங்களை தூர்வாருவதாகக் கூறி அரசு கஜானாவை தூர்வாரிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.
சென்னை: ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருவதற்கு பதிலாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது அமைச்சரவையும் அரசு கஜானாவை தூர்வாரிவிட்டதாக டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், தினகரன் கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்பட்டு வந்தது. இதனால் அவ்வப்போது தமிழக அரசின் செயல்பாடுகளை டிடிவி தினகரனும் அவரது ஆதரவாளர்களும் விமர்சித்து வந்தனர்.

தருமபுரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் அதிமுகவின் 46-வது ஆண்டு தொடக்க விழா பொது கூட்டம் டிடிவி தினகரன் அணி சார்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தினகரன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவர். இதையடுத்து எங்கள் அணி தலைமையில் புதிய ஆட்சி அமையும்.
இதற்கு புதிதாக வாக்காளர்களாக சேர்ந்துள்ள 50 லட்சம் இளைஞர்கள் எங்களுக்கு துணை நிற்பார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஏரி குளங்களை தூர்வாருவதாகக் கூறி, அரசு கஜானாவை தூர்வாரி விட்டனர் என்று தினகரன் குற்றம்சாட்டினார்.
தமிழக அரசின் செயல்பாடுகளை குறை கூறி வந்த நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி மற்றும் ஆட்சியாளர்கள் மீது ஊழல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications