தூத்துக்குடி பள்ளி மாணவ, மாணவியருக்கு திடீர் அரிப்பு.. ஊசி போடாதீர்கள் என்று அழுததால் பரபரப்பு!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஏற்பட்ட திடீர் அரிப்பின் காரணமாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர்களை அனுமதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்ததில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இன்று காலை உடலில் திடீரென அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர்.
அவர்களில் 14 மாணவிகள் மற்றும் 4 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளித்த பின்னர் சகஜ நிலைக்கு வந்தனர். முன்னதாக சில மாணவிகள், தங்களுக்கு ஊசி போடவேண்டாம் என்று கூறி கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை டாக்டர்கள் அமைதிப்படுத்தினர்.
இது குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையின் உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணியிடம் கேட்டபோது, அலர்ஜியின் காரணமாக அரிப்பு ஏற்பட்டு இருக்கலாம் தற்போது சிகிச்சைக்கு பின் அனைவரும் நலமாக உள்ளதாக தெரிவித்தார்.