ஈயோட்டும் பிரச்சாரக் கூட்டங்கள்... டிவி நேரலையால் குறையும் மக்கள் கூட்டம்
சென்னை: சம்பந்தப்பட்ட இடத்திற்கே சென்று மக்களைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத் தான் பல்வேறு இடங்களில் பலதரப்பட்ட பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. ஆனால், பக்கத்து தெருவில் நடக்கும் பிரச்சாரத்தைக் கூட வீட்டில் அமர்ந்தபடி பார்க்கும் மனநிலையில் தான் மக்கள் உள்ளனர் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது சமீபத்திய பொதுக்கூட்டங்களுக்கு வந்திருந்த கூட்டம்.
உலகையே ஒரு குடையின் கீழ் கொண்டு வந்துவிட்ட தொழில்நுட்ப வளர்ச்சியால், இருந்த இடத்திலேயே உலகின் எந்த மூலையில் நடப்பவற்றையும் நேரடியாக தொலைக்காட்சி மற்றும் இணையம் வாயிலாக பார்த்து விட முடிகிறது.
அந்தவகையில் பிரச்சாரக் கூட்டங்களும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப் படுவதால் அதனை நேரில் சென்று பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை உண்மை என நிரூபிப்பது போல சமீபத்திய பொதுக்கூட்டங்கள் பல வெறிச்சோடிக் காணப்பட்டன.
அதேபோல், தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடைக்குள் உலகம்....
பல ஆயிரம் ரூபாய் நுழைவுக் கட்டணம் செலுத்தி பார்க்கப் படும் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் கூட இன்று இலவசமாக நமது வரவேற்பறையில் நமக்கு விளம்பரதாரர் புண்ணியத்தால் வந்து சேர்ந்து விடுகிறது.
துல்லியமான விசயங்கள்...
நேரில் பார்ப்பதை விட சில சமயங்களில் இவ்வாறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைக் காண்பது மிகவும் வசதி. காரணம் கூட்டத்தில் தொலைவில் நேரில் காண முடியாத சில நுணுக்கமான விசயங்கள் கூட தொலைக்காட்சியில் கேமராக்களின் உதவியால் துல்லியமாக காண்பிக்கப் பட்டு விடுகின்றன.
அந்த கால நினைவுகள்....
தற்போது தேர்தல் பிரச்சாரங்களும் இந்த வரிசையில் சேர்ந்து விட்டன. சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வயதானவர் ஒருவர், தான் அந்தக் காலத்தில் எவ்வாறு அரசியல் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டேன் என தனது அனுபவங்களை விவரித்திருந்தார்.
காத்திருந்த கண்கள்....
அதில் அவர் வெகு நேரத்திற்கு முன்பே சென்று பொதுக் கூட்டத்தின் முதல் வரிசையில் இடம் பிடித்ததாகவும், அதற்காக பல மைல் தூரம் பயணம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சேனலை மாத்து....
ஆனால், இன்றைய சூழல் அப்படியா உள்ளது. இருந்த இடத்திலேயே நமக்கு விருப்பமான தலைவர்களின் உரையை சுலபமாக பார்க்க முடிகிறது. பிடிக்காத உரைகளை மாற்ற முடிகிறது.
ஆஸ்தான சேனல்களின் தயவில்...
அதிலும், கட்சிகள் தங்களுக்கென ஆஸ்தான தொலைக்காட்சி சேனல்களை ஒதுக்கி வைத்திருப்பதால் சுலபமாக வெளியூர் பிரச்சாரங்களும் முழுமையாக தங்கு தடையின்றி நேரடியாக ஒளிபரப்பாகின்றன.
குறையும் கூட்டம்....
இதனால் நேரில் வருபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறுகின்றனர் நேரில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க வரும் சிலர்.
வயசாகிடுச்சுல... அதான்
ஆனால், இதற்கு தொழில்நுட்பத்தை மட்டும் குற்றம் சொல்வது தவறு. பணத்தைத் தேடி ஓடும் இந்த உலகில் வீட்டிலிருக்கும் வயதானவர்களுக்கு வெளியில் சென்று பார்க்கும் அளவிற்கு போதிய உடல் பலம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காசும், கட்டிங் தர்றாங்களாம்...
இதனால் பல அரசியல் கட்சிகள் பஸ், வேன் என வாகனங்களை அனுப்பி ஆட்களைத் திரட்டி, அவர்களுக்கு காசும் கொடுத்து பிரியாணி, சரக்கு வாங்கிக் கொடுப்பதாக தேர்தல் ஆணையத்தில் புகார்கள் குவிகின்றனவாம்.
கூட்டத்தை தொடர்ந்து மருத்துவமனியில் கூட்டம்...
சமீபத்தில் கூட இப்படித் தான் கட்சியொன்றிற்காக பிரச்சாரக் கூட்டத்திற்காக அழைத்து வரப்பட்ட மக்கள் சிலர் அங்கு தரப்பட்ட உணவு ஒத்துக் கொள்ளாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டது தனிக்கதை.
இதுவும் ஒரு வேலைதிட்டம் தான்...
அதேபோல், ஒரு குறிப்பிட்ட கட்சி வேட்பாளர் மீது நூறு ரூபாய் வேலை திட்டத்திற்கு சென்றவர்களை அதிக பணம் கொடுத்து கூட்டம் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டு பதிவானது குறிப்பிடத்தக்கது.
நஷ்டத்தில் சிறிய வியாபாரிகள்...
இதனால் இத்தகைய பிரச்சாரக் கூட்டங்களை நம்பி கடைகள் போடும் பலர் இம்முறை கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளராம். ஆனால், இப்பிரச்சாரக் கூட்டங்களால் தொலைக்காட்சி நிறுவனங்கள் கல்லா கட்டுகின்றன.
தலைவர் பேசினால்....
ஆனபோதும், முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கு கொள்ளும் கூட்டங்களுக்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே வருவதாக கட்சித் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.
கவர்ச்சி நடனம்....
சில கட்சிகள் கூட்டத்தை அதிகரிக்க மக்களைக் கவரும் வகையில் கவர்ச்சி நடனங்களையும் அரங்கேற்றுகிறார்கள். அவற்றைக் காண்பதற்காகவே சிலர் காத்துத் தவம் கிடப்பதையும் பார்க்கத் தான் முடிகிறது. ஏனெனில் டிவியில் கவர்ச்சி நடனத்தை மட்டும் கட் செய்து ஒளிபரப்புகிறார்களாம்...