அதிமுகவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை: 11 தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை
சென்னை: அதிமுகவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை இன்று தொடங்கியது. அப்போது 11 தொகுதிகள் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற கட்சிகள் எல்லாம் வேட்பாளர் தேர்வு, கூட்டணி அமைக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுகவின் நிலை தெரியாமல் இருந்தது. அந்தக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுமா, தனித்துப் போட்டியிடுமா என்ற குழப்பம் இருந்து வந்தது.

இதையடுத்து கடந்த 13-ம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஜி.தேவராஜன், மாநில செயலாளர் பி.வி.கதிரவன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், இந்திய குடியரசு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் செ.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் தனியரசு, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதிமுகவின் ஐவர் அணி நால்வர் அணியாக மாற்றப்பட்டுள்ளதால் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி ஆகிய அமைச்சர்கள் வேல்முருகனுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 11 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வேல்முருகன் கோரியுள்ளார்.
மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு சாதகமான 11 தொகுதிகளையும் தேர்வு செய்து, அந்தப் பட்டியலையும் அதிமுகவினரிடம் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications