நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்.. 3 பேர் படுகாயம்... 11 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் இரு கும்பல்களிடையே பயங்கர மோதல் வெடித்தது. பயங்கர ஆயுதங்களுடன் இரு தரப்பும் மோதிக் கொண்டன. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து 11 பேரைக் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள சத்யாநகர் பகுதியைச் சார்ந்தவர் ராமச்சந்திரன். இவர் இப்பகுதியில் கார் ஒர்க்ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். இதே சத்யா நகர் பகுதியைச் சார்ந்த சலீம் என்பவர் இப்பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ராமசந்திரன் மற்றும் சலீம் ஆகிய இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வரும் நிலையில் இரு தரப்பினர் மீதும் தூத்துக்குடி தென்பாகம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11மணியளவில் சலீம் தரப்பைச் சார்ந்த ஒரு கும்பல் குடிபோதையில் ராமசந்திரனின் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராமசந்திரனின் குடும்பத்தினர் இந்த திடீர் தாக்குதலில் நிலை குலைந்து போயினர். மேலும் ராமசந்திரனின் கார் ஒர்க்ஷாப் மீதும் தாக்குதல் நடத்திய சலீம் தரப்பினர் சாலையில் போய் கொண்டிருந்த பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும் ராமசந்திரனின் ஒர்க்ஷாப் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு காரையும் சலீம் கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் பற்றி அறிந்து அக்கம்பக்கத்தில் உள்ள ராமச்சந்திரனின் உறவினர்கள் ஓடி வர சலீம் தரப்பினர் தப்பியோடியுள்ளனர். இந்த
திடீர் தாக்குதலில் ராமசந்திரனின் தாயார் சேசம்மாள், ராமசந்திரனின் தம்பி மாரிமுத்து மற்றும் அருண்குமார் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமசந்திரன் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய சலீம் கும்பலை சார்ந்த சங்கர் என்பவர் ஓடும் பேருந்தில் ஏறும் போது கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் அவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மோதல் சம்பவம் பற்றி அறிந்து விரைந்து வந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் இரு தரப்பினர் அளித்த புகார் அடிப்படையில் சலீம் மற்றும் ராமச்சந்திரன் தரப்பைச் சார்ந்த 15 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சலீம் மற்றும் ராமச்சந்திரன் தரப்பை சார்ந்த 11 பேரை கைது செய்துள்ள போலீசார் தாக்குதல் நடத்திய சலீம் உட்பட நான்கு பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.