சகாயம் மட்டும் இல்லைங்க.. நேர்மையாக இருப்பதால் குறி வைக்கப்படும் இந்த அதிகாரி நிலையை பாருங்க
சென்னை: பள்ளிக் கல்வித்துறை செயலர் உதய சந்திரன் ஐ.ஏ.எஸ் மாற்றப்படுவார்' என்ற தகவல், பொதுவெளியில் வலம் வருகிறது. ' கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்த உதயசந்திரனை மாற்றக் கூடாது' என கல்வியாளர்களும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் கொதிக்கத் தொடங்கியுள்ளனர்.
'உதயசந்திரன் ஆர்மி' என்ற ஃபேஸ்புக் பக்கத்தையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். ' கல்வித்துறையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்கள் கோரப்பட உள்ளன. இதற்கு இடையூறாக இருப்பார் என்பதற்காகவே உதயசந்திரனை நீக்கத் துடிக்கிறார்கள்' என்கின்றனர் பள்ளிக் கல்வி வட்டாரத்தில்.
தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொடங்கி ஜெயலலிதா மரணம் வரையில் சுமார் ஆறு ஆண்டுகள் பள்ளிக் கல்வி செயலராக கோலோச்சியவர் சபீதா ஐ.ஏ.எஸ். இவருடைய பணிக் காலத்தில் ஏராளமான முறைகேடுகள் அரங்கேறியதாக கல்வியாளர்கள் வேதனைப்பட்டனர்.

பல கோடி வீண்
இலவச காலணி, புத்தகப் பை, சீருடை, மாணவர்களுக்கான கலர் பென்சில்கள், பாடப்புத்தக சி.டிகள் என அனைத்திலும் பல நூறு கோடி ரூபாய்கள் விரயமானது. இந்த ஒப்பந்தங்களில் சில நிறுவனங்கள் கமிஷனுக்கு ஒத்து வராத காரணத்தால், மறு டெண்டர் என்ற பெயரில் மக்கள் பணத்தை வீணடித்தனர். இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றதும், சபீதாவை ஓரம்கட்டும் வேலைகள் நடந்தன.

செங்கோட்டையனுக்கு மதிப்பு
மீண்டும் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முயன்றும், எடப்பாடி பழனிசாமி தலையீட்டால் டம்மி பதவிக்கு மாற்றப்பட்டார் சபீதா. இதனையடுத்து, உதய சந்திரன் பதவியேற்றதும் பிளஸ் 1 பொதுத் தேர்வு, ரேங்கிங் முறை ரத்து உள்பட பல அதிரடிகளை செயல்படுத்தினார். இதனால் அமைச்சர் செங்கோட்டையனின் இமேஜும் உயர்ந்தது.

கதறும் கரை வேட்டிகள்
இதுகுறித்து நம்மிடம் கல்வி அதிகாரி ஒருவர், " மக்கள் மத்தியில் அமைச்சரின் செல்வாக்கு உயர்ந்தாலும் கட்சிக்காரர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை. ஆசிரியர் பணிமாறுதல் உள்பட அனைத்து விஷயங்களிலும் நேர்மையான அணுகுமுறையைப் பின்பற்றினார் உதய சந்திரன். ஓரிரு மாதங்களுக்கு முன்பு நடந்த ஆசிரியர் கலந்தாய்வில், வெளிப்படையான நடைமுறை கையாளப்பட்டதால் கரைவேட்டிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா மூன்று லட்சம் வீதம் முன்கூட்டியே வசூல் செய்துவிட்டனர். ஆனால், பணம் கொடுத்த ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் கிடைக்கவில்லை.

பல கோடி ஒப்பந்தங்கள்
இதுதவிர, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பாடநூல் கழக நிறுவனம் சார்பில், இலவச காலணி, புத்தகப் பை டெண்டர் விடப்படுவது வழக்கம். ஒவ்வொரு டெண்டரும் 120 கோடி மதிப்புடையவை. இந்தியா முழுவதும் உள்ள பிரபல நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்க உள்ளன. இதற்காக முன்கூட்டியே துறையின் மூத்தவரை சந்தித்து, 'முறையான' அனுமதியை அவர்கள் பெற்றுவிட்டனர்.
இதுதவிர, மலைவாழ் பள்ளிக் குழந்தைகளுக்கான உல்லன் ஸ்வெட்டர்கள், கலர் பென்சில், ஜாமிண்ட்ரி பாக்ஸ் உள்பட சுமார் 700 கோடி ரூபாய்களுக்கான பணிகளுக்கும் ஒப்பந்தம் கோரப்பட உள்ளன.

பணியிடமாற்றத்திற்கு சதி நடக்கிறது
' டெண்டர் பிரிக்கப்படும் நேரத்தில் உதய சந்திரன் இருந்தால், எதையும் சாதிக்க முடியாது' என்பதால் அவரை பணியிட மாற்றம் செய்யத் துடிக்கின்றனர். இந்த ஆபரேஷன் பின்னணியில் சேலத்தைச் சேர்ந்த பள்ளிக் கல்வி ஒப்பந்ததாரர்கள் சிலர் உள்ளனர். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சேலம் குழுவைக் கலைக்க முடியாது. அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவற்றில் கடந்த பத்து ஆண்டுகளாக இவர்கள் அடித்து வரும் மோசடிகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், சேலம் புள்ளிகளின் செல்வாக்கை யாராலும் அசைத்துப் பார்க்க முடியவில்லை. பள்ளிக் கல்வித்துறையின் பல இயக்குநர்கள் சேலம் குழுவுக்கு ஆதரவாக இருப்பதால், அதிகாரத்துக்குள் அவர்களின் ஆட்டம் எல்லை மீறிப் போகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உதய சந்திரன் மூலமாக சில நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கியிருக்கிறது. அதற்கும் வேட்டு வைக்கத் தொடங்கிவிட்டார்கள்" என்றார் விரிவாக.












Click it and Unblock the Notifications