நீதிபதிகளுக்கு இடைஞ்சல்... ஓபிஎஸ் வீட்டை காலி செய்யுங்கள்- காவல்துறை ஆணையரிடம் புகார்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டை காலி செய்யக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நீதிபதிகளின் அமைதிக்கு இடைஞ்சலாக இருப்பதால் சென்னை கிரீன்வேல் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் கடந்த 10 ஆண்டுகளாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை வீட்டில் தான் வசித்து வருகிறார். நிதி அமைச்சராக இருந்த போது ஓ.பன்னீர் செல்வத்துக்கு இந்த வீடு கொடுக்கப்பட்டது. முதல்வரானாலும் இந்த வீட்டில்தான் வசித்து வந்தார்.
பிப்ரவரி 7ஆம் தேதி முதல் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்துள்ளுது. இந்த வீட்டில் இருந்து தான் சசிகலாவுக்கு எதிராக அணியை ஓபிஎஸ் திரட்டிவருகிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்றதை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஓபிஎஸ் உடனடியாக காலி செய்யாத பட்சத்தில் குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு, கழிவு நீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே முன்கூட்டியே வேறு வசதியான ஏரியாவில் வீடு பார்க்கத் தொடங்கி விட்டார் ஓ.பன்னீர் செல்வம்.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
நீதிபதிகள் வசிக்கும் பகுதியில் ஓபிஎஸ் வசிப்பதால் கூட்டம் அதிகமாக கூடுவதாகவும், இதனால் நீதிபதிகளின் அமைதிக்கு பங்கம் ஏற்படுவதாகவும், அவரது புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.