வாக்காளப் பெருமக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம்: வைகோ
சென்னை: "வாக்காளப் பெருமக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம்" என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக அணியில் 7 தொகுதிகளில் மதிமுக போட்டியிட்டது. ஆனால் 7 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது அக்கட்சி. மதிமுக பொதுச்செயலர் வைகோவும் விருதுநகர் தொகுதியில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அகில இந்திய அளவில் நரேந்திர மோடி ஆதரவு பேரலை மிகப் பெரும்பான்மையான மாநிலங்களில் வீசியதால் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெறவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரமிக்கத்தக்க மகத்தான வெற்றி பெறவும் வாக்காளப் பெருமக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று பிரதமர் பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் வாக்காளப் பெருமக்கள் வழங்கி உள்ள தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஊழலற்ற நேர்மையான அரசியலை வென்றெடுக்கவும், தன்னலமற்ற மக்கள் பொதுத்தொண்டை முன்னெடுக்கவும் உறுதிகொண்டு தொடர்ந்து பாடுபடும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.