என் சொத்து மதிப்பு ரூ. 1.36 கோடி... கடன் 1 லட்சம்: வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த வேட்புமனுவில் ஒரு கோடி 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் பற்றிய விபரங்களை அளித்துள்ளார்.
விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வைகோ, செவ்வாய்கிழமையன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் தன்னுடைய சொத்துமதிப்பு, தன்மீதுள்ள வழக்குகள் பற்றிய தகவல்களையும் தெரிவித்துள்ளார்.
அசையும், அசையா சொத்துக்கள்
வைகோ பெயரில் உள்ள அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.10 லட்சத்து 99 ஆயிரத்து 998. மனைவி ரேணுகாதேவி பெயரில் உள்ள அசையும் சொத்து ரூ.69 லட்சத்து 66 ஆயிரத்து 393. வைகோ பெயரில் உள்ள அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம். வைகோ சுய சம்பாத்தியமான அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம். அவரது மனைவி பெயரில் உள்ள அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.15 லட்சம்.
பூர்வீக சொத்துக்கள்
வைகோ பெயரில் உள்ள பூர்வீக சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 36 லட்சம். அவரது மனைவி பெயரில் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 23 லட்சம். வைகோ பெயரில் உள்ள வங்கிக் கடன் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 545.
8 வழக்குகள் பதிவு
அதுபோல் குற்ற வழக்குகள் பற்றிய உறுதி மொழிப்பத்திரத்தில், திருமங்கலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச விரோதமாக பேசியதாக ஒரு வழக்கும், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கு, சென்னை கியூ பிராஞ்ச் போலீசாரால் தேசத்துக்கு எதிராக வன்முறையாக பேசியதாக ஒரு வழக்கு, கடந்த 2007 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக அவதூறாக பேசியதாக 4 வழக்குகள், திருநெல்வேலியில் ஒரு கொலை வழக்கு என்று 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறை தண்டனை
அதில் கொலை வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்ததன் மூலம் அந்த சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டு விட்டது. அதுபோல், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்று வைகோ தனது உறுதி மொழிப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.