கொஞ்சம் கூட கண்ணியமே இல்லாத தலைவர் மோடி... வைகோ பரபரப்பு சாடல்!
நாகர்கோவில்: நான் பாஜக தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி போன்றோருடன் பழகியுள்ளேன். ஆனால் அவர்களுடன் ஒப்பிடுகையில், ஒரு சதவீதம் கூட கண்ணியமான அணுகுமுறை இல்லாதவர் நரேந்திர மோடி என்று கடுமையாக சாடியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
வைகோ, விடாமல் மோடியை வெளுத்து வாங்கி வருகிறார். மோடி பிரதமரானது முதலே ஈழத் தமிழர் விவகாரத்திலும் சரி, தமிழக மீனவர்கள் விவகாரத்திலும் சரி முரண்பாடாக நடந்து வருகிறார் என்பது மதிமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளின் குற்றச்சாட்டாகும். மேலும் யாரும் எதிர்பாராத வகையில் குறிப்பாக பாஜகவுடன் போட்டி போட்டு கூட்டணி வைத்த மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சற்றும் எதிர்பாராத வகையில் ராஜபக்சேவுடன் மத்திய அரசும், மோடியும் நெருக்கம் காட்டி வருகிறார்கள்.
சமீபத்தில் சார்க் மாநாட்டுக்காக நேபாளத்திற்குப் போன மோடி, அங்கு ராஜபக்சேவைச் சந்தித்தார். அவரிடம், இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துவதாக அவர் கூறியது வைகோவையும், தமிழக அரசியல் கட்சிகளையும் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை வைகோ கடுமையாக சாடியிருந்தார். மேலும் மத்திய அரசின் இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பையும் அவர் கடுமையாக சாடினார். இந்த நிலையில் நேற்று நாகர்கோவிலில் மோடியை மேலும் சாடிப் பேசினார். இந்த முறை கண்ணியமே இல்லாத மோடி என்று அவர் கூறியிருக்கிறார்.
நியாயமான விமர்சனம்.. தொடர்ந்து பேசுவேன்
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கடந்த 27 ம் தேதி நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் நான் பேசும்போது, பிரதமர் மோடியை விமர்சனம் செய்தேன். அந்த விமர்சனம் நியாயமான விமர்சனம். அந்த விமர்சனத்தை நான் தொடர்ந்து செய்வேன்.
தமிழ் இனத்தை அழித்த ராஜபக்சே
காத்மாண்டுவில் நடந்த சார்க் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் இனத்தை அழித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தரம் தாழ்ந்து விட்டார் மோடி
இன்னொரு நாட்டில் நடைபெறும் தேர்தலில் இன்னார் வெற்றி பெற வேண்டும் என்று நமது நாட்டின் எந்த பிரதமரும் வாழ்த்தியது கிடையாது. இதன் மூலம் நரேந்திர மோடி, பிரதமர் பதவியின் தரத்தை தாழ்த்தி விட்டார். இதைத்தான் பொதுக்கூட்டத்தில் நான் பேசினேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
மோடி என்ன தனி நபரா...
இப்படி வாழ்த்து கூறுவதற்கு பிரதமர் மோடி தனிப்பட்ட நபர் கிடையாது. 120 கோடி மக்களின் பிரதிநிதி அவர். சுப்பிரமணியம் சாமி, ராஜபக்சேவுக்கு இந்திய நாட்டின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இப்படியே போனால் காந்தியை கொன்ற கோட்சேவுக்கும் விருது கொடுக்க வேண்டும் என்று கூறுவார்கள் போலிருக்கிறது. இப்படி பேசுவதை பா.ஜனதா தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் யாரும் கண்டிக்கவில்லை.
சாமி பேச்சை நியாயப்படுத்துகிறாரா தமிழிசை
தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அது சாமியின் கருத்து சுதந்திரம் என்கிறார். அப்படி என்றால் அவரது பேச்சை தமிழிசை சவுந்தரராஜன் நியாயப்படுத்துகிறாரா?
காரைக்குடி ராஜா
இன்னொருவர் காரைக்குடியைச் சேர்ந்தவர், பா.ஜ.க கட்சியின் தேசிய செயலாளரான ராஜா. அவர் நேற்று கூறியிருக்கிறார். வைகோ இப்படியே பேசிக்கொண்டிருந்தால் தமிழகத்தில் எங்கும் பாதுகாப்பாக போக முடியாது. எனவே அவர் தனது நாவையும், வாயையும் அடக்க வேண்டும். இல்லையென்றால் பா.ஜனதா தொண்டர்கள் அடக்குவார்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள ம.தி.மு.க. தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். பல்வேறு போராட்டங்களை நடத்த முயன்றனர். இதையறிந்த நான் யாரும் போராட்டம் நடத்தவோ, உருவ பொம்மைகளை எரிக்கவோ கூடாது என்றும், அப்படி செய்தால் நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரித்துள்ளேன்.
யாரும் மிரட்டிப் பார்த்தது இல்லை
காங்கிரஸ் கட்சி தலைவர்கள், பிரதமர்கள், எம்.ஜி.ஆர்., தி.மு.க. தலைவர் கருணாநிதி போன்ற தலைவர்களை நான் விமர்சனம் செய்துள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் தனிப்பட்ட முறையில் தாக்கியது இல்லை. மிரட்டிப்பார்த்ததும் இல்லை. அ.தி.மு.க. தோழர்கள் ஆத்திரப்பட்டது இல்லை. தி.மு.க. தோழர்கள் தங்களது தலைவரை எப்படி பேசலாம் என்று ஆத்திரப்பட்டதில்லை.
பாசிச பாஜக
பாசிச மனப்பான்மையோடு பா.ஜ.க. கட்சியினர் என்னை விமர்சனம் செய்து வருகிறார்கள். இது திட்டமிட்ட ஒரு நோக்கத்துக்காக செய்யப்படுகிறது. எதற்கும் ஒரு தகுதி வேண்டும். எனவே தகுதியில்லாதவர்களை கண்டித்தோ, எதிர்த்தோ உருவ பொம்மைகளை எரிக்கவோ, போராட்டத்தில் ஈடுபடவோ வேண்டாம் என்று எனது கட்சியினரை நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.
சுப்ரீம் கோர்ட் என்ன சாமி பாக்கெட்டிலா இருக்கு
ராஜா வீட்டை ம.தி.மு.க.வினர் முற்றுகை செய்யப்போவதாக அறிகிறேன். எனவே, ம.தி.மு.க.வினரை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோர்ட்டு வழங்கிய ஜாமீன் மனுவை ரத்து செய்ய மனு தாக்கல் செய்வேன் என்று சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு சுப்பிரமணியசுவாமியின் பாக்கெட்டிலா உள்ளது?
ஜெ.வுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்
ஜெயலலிதாவுக்கும், இந்த பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்? அ.தி.மு.க. அரசை இவர் எப்படி மிரட்டலாம்?
நான் பழகிய வாஜ்பாய், அத்வானி
பா.ஜ.கவைச் சேர்ந்த வாஜ்பாய், அத்வானி ஆகியோர் மிகப்பெரிய தலைவர்கள். அவர்களுடன் கூட்டணியில் இருக்கும்போதும், இல்லாதபோதும் நான் பழகியிருக்கிறேன்.
கண்ணியமே இல்லாத மோடி
அவர்களது கண்ணியமான அணுகுமுறையில் ஒரு சதவீதம்கூட மோடியிடம் இல்லை. பா.ஜ.க கூட்டணியில் சேரவேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜுலு, தமிழக பொறுப்பாளர் முரளீதரராவ் ஆகியோர் என்னை சந்தித்து கேட்டுக்கொண்டனர். அப்போது அவர்களிடமும் சரி, மோடியை சந்தித்து பேசியபோதும் சரி ஈழத்தமிழர் பிரச்சினையில் வாஜ்பாய் கடைபிடித்த அணுகுமுறை இருக்கவேண்டும் என்று கூறியிருந்தேன்.
எனக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி
என்னை விமர்சித்தவர்களை கண்டித்து பல்வேறு கட்சி தலைவர்களும், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் வைகோ.