கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதா.. தடுத்து நிறுத்துவோம்.. வைகோ ஆவேசம்
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர மாநிலத்தை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்று வைகோ கூறியுள்ளார்.
தஞ்சாவூர்: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திரா அரசு அணைக் கட்டுவதை எதிர்த்து போராடுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கொசஸ்தலை ஆற்றின் கிளை ஆறான லங்கா ஆற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டும் பணியை தொடங்கியுள்ளது. லங்கா ஆற்றின் 4 இடங்களில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது.
சித்தூர் சீதலகுப்பத்தில் தடுப்பணைக்கான கட்டுமான பணிகளை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. இதற்கான பணிகளுக்காக மணல், ஜல்லி கற்கள் ஆகியவற்றை அம்மாநில அரசு கொட்டி வைத்துள்ளது. ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து சீதலகுப்பத்தில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விரைவில் போராட்டம்
ஆந்திர மாநில அரசின் இந்த நடவடிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டித்துள்ளார். இதுகுறித்து தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, விரைவில் ஆந்திரா அரசின் இந்தச் செயலை தடுத்து நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.
தடுத்த நிறுத்த..
மேலும், ஆந்திர அரசின் தடுப்பணைக் கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரினார். அதற்கான முயற்சிகளை விரைவில் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பஞ்ச பிரதேசம்
அதே போன்று காவிரி டெல்டா மாவட்டங்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவை தமிழகத்தின் பஞ்ச பிரதேசமாக மாறும் நிலை உருவாகியுள்ளது என்று வைகோ கவலை தெரிவித்தார்.
விபரீத விளைவு
மாடு விற்பனைக்கான தடை என்பது மத்திய அரசு மக்களுக்கு செய்துள்ள அநீதியாகும். மத்திய அரசின் இந்த உத்தரவால் விபரீதம் விளைவுகள் ஏற்படும் என்றும் வைகோ எச்சரித்துள்ளார்.