வைகோ, ஜிஆர், முத்தரசன், வாசன் தேர்தலில் போட்டியிடாமல் 'எஸ்கேப்'- இது திருமாவளவன் பேச்சு
காட்டுமன்னார்கோவில்: சட்டசபை தேர்தலில் வைகோ. ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன், ஜி.கே.வாசன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடாமல் "எஸ்கேப்" ஆகிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகளில் திருமாவளவனுக்கு கடும் போட்டி இருப்பதாகவும் அவர் தோல்வியைத் தழுவக் கூடும் என்றும் ஊடகங்கள் பல்வேறு கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்றைய பிரசாரத்தின் போது திருமாவளவன் பேசியதாவது:
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மோதிரம் சின்னத்தில் வாக்களித்து என்னை எம்.எல்.ஏ.வாக்குங்கள் என பதவி ஆசையில் நான் கேட்கவில்லை. நாங்கள் 6 கட்சி கூட்டணிகள் முன்னெடுத்திருக்கும் முயற்சியை வெற்றி பெறச் செய்யுங்கள்.
காட்டுமன்னார்கோவில் மற்றும் உளுந்தூர்பேட்டையில் நானும் விஜயகாந்தும் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக திமுகவும் அதிமுகவும் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி இறைக்கிறார்கள் என்று அவர்கள் தரப்பில் இருந்தே தகவல். உங்கள் இரண்டு பேரையும் டார்கெட் பண்ணியாச்சு... காலி பண்ணிடுவோம்...
நாங்கள் 6 பேரில் 4 பேர் நிற்கவில்லை... அண்ணன் வைகோ எஸ்கேப்பாகிவிட்டார்... அண்ணன் ஜி.ஆர். எஸ்கேப்.. அண்ணன் முத்தரசன் எஸ்கேப்ட்... அண்ணன் ஜி.கே.வாசன் அவரும் நிற்கலை.. தப்பிச்சுகிட்டார்....
நாங்க இரண்டு பேர் நிற்கிறோம்... இந்த 2 பேரையும் வெற்றி பெறவிடக் கூடாது என்பதற்காக காட்டுமன்னார்கோவிலுக்கு ரூ15 கோடி வந்திருப்பதாகவும் உளுந்தூர்பேட்டைக்கு ரூ30 கோடி போயிருப்பதாகவும் அதிமுக தரப்பில் இருந்தே தகவல். திமுக தரப்பில் இருந்தும் காசு கொடுக்க தொடங்கிவிட்டனர்.
அதிமுக, திமுகவுக்கு நோக்கம் திருமாவளவனின் ஓட்டுகளைக் கலைக்க வேண்டும் என்பதுதான்... திமுக, அதிமுகவுக்கு மாற்று அணியை அமைப்பதில் முயற்சித்த காரணத்தால்தான் இப்படி அதிமுக, திமுக செயல்படுகின்றன.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.