கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடுங்கள்: வைகோ ஆவேசம்
சென்னை: கூடங்குளம் அணுஉலைகளை அகற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நேற்று ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் காயமடைந்த நிலையில், வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு உள்ள அணுமின்விசை நிலையத்தின் முதலாவது அணுஉலையில் மே 14ஆம் தேதி பராமரிப்புப் பணியை தொடங்கியபோது, விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள ‘டர்பைன்' பகுதியில் வெப்ப நீர் எடுத்துச் செல்லும் குழாய்களின் வால்வு திறக்கப்பட்டபோது, இந்தப் பணியில் ஈடுபட்டு இருந்த ராஜன், பால்ராஜ், செந்தில்குமார், ராஜேஷ், வினு, மகேஷ் ஆகிய ஆறு தொழிலாளர்கள் மீது வெப்ப நீர் கொட்டியதால், அவர்கள் கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டு, நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவித்தது. கூடங்குளத்தில் என்ன நடக்கிறது என்பது வெளிஉலகிற்குத் தெரிவது இல்லை.
கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலைகள் ஒன்று மற்றும் இரண்டில் பயன்படுத்தப்பட்டு உள்ள உதிரிப்பாகங்கள் தரம் குறைந்தவை என்று ரஷ்ய ஊடகங்கள் வாயிலாக அம்பலம் ஆயின. ஜியோ-போடோல்ஸ்க் உள்ளிட்ட நிறுவனங்கள் கூடங்குளம் அணுஉலைகளுக்கு அளித்துள்ள உதிரி பாகங்கள் சோதனைக் கட்டத்திலேயே குறைபாடுகள் கொண்டவையாக இருந்தன என்ற அச்சம் எழுந்தது. அந்நிறுவனத்தின் கொள்முதல் இயக்குநர் செர்கெய் ஷூடோவ் என்பவரை ரஷ்ய அரசு கைது செய்து, விசாரணை நடத்தியதை நார்வே நாட்டில் இயங்கும் சர்வதேச சுற்றுச் சூழல் தன்னார்வ அமைப்பான பெல்லோனா பவுண்டேஷன் 2012 பிப்ரவரியில் வெளிப்படுத்தியது.
ஆனால், இந்திய அணுசக்தித் துறை மற்றும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியம், அணுஉலை பாதுகாப்பு குறித்த ஐயப்பாடுகளை அலட்சியப்படுத்திவிட்டு, அணு மின் உற்பத்தியைத் தொடங்குவதிலேயே குறியாக இருந்தன. கூடங்குளம் அணுஉலையை இயக்குவதன் மூலம் தமிழக மக்களின் உயிரை மத்திய அரசு பணயம் வைத்து இருக்கிறது. ஜெயலலிதா அரசு தமிழக மக்களை ஏமாற்றி நாடகம் ஆடியது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவது வன்மையான கண்டனத்திற்குரியது ஆகும்.
ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகூட புகுஷிமா அணுஉலை விபத்தைத் தடுக்க முடியவில்லை. வேறு பல நாடுகளில் விபத்து ஏற்பட்டுள்ள அணுஉலைகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அபாயங்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்கள். எனவே, கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலைகளை முற்றாக அகற்ற வேண்டும். மூன்று மற்றும் நான்காவது அணுஉலைகளை அமைக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.