சசிபெருமாள் மரண வழக்கு... தன்னையும் மனுதாரராக சேர்க்க ஹைகோர்ட்டில் வைகோ கோரிக்கை
சென்னை: சசிபெருமாள் மரணம் தொடர்பாக தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்குமாறு சென்னை ஹைகோர்ட்டில் வைகோ கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 31ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி செல்போன் டவர் மீது ஏறிப் போராடிய காந்தியவாதி சசிபெருளாள், போராட்டகளத்திலேயே உயிரிழந்தார்.
தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் விவேக், சென்னை ஹைகோர்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

என் தந்தை சசிபெருமாள், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதற்காக அவர் நீண்ட நாட்களுக்கு தொடர் உண்ணாவிரதம் இருப்பார்.
கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைகடையில் உள்ள மதுக்கடையை மூடக் கோரி என் தந்தை செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டபோது, இறந்துவிட்டதாக தகவல் வந்தது. அன்று இரவு நானும், என் சித்தப்பாவும் மார்த்தாண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று என் தந்தையின் உடலை பார்த்தபோது, அவரது கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளில் காயம் இருந்தது.
எனவே, என் தந்தையின் மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. என் தந்தை மரணம் குறித்து ஹைகோர்ட் நீதிபதி அல்லது ஓய்வுப்பெற்ற நீதிபதியை கொண்டு நீதி விசாரணை நடத்தவேண்டும்' எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடர் எஸ்.டி.எஸ். மூர்த்தி பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
தமிழக பொதுத்துறை முதன்மை செயலாளர் யத்திந்திரநாத் ஸ்வேன் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், ‘சசிபெருமாள் தற்கொலை செய்துக் கொண்டார் என்று கூறி அவரது நற்பெயருக்கு அதிகாரிகள் களங்கம் ஏற்படுத்துவதாக மனுதாரர் கூறுவதும் தவறு. பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் தூக்கில் தொங்கியதால் மரணமடைந்துள்ளார் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தை திசைதிருப்பக்கூடாது. அதிகாரிகள் முடிந்தவரை, சசிபெருமாளை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். சசிபெருமாள் சாவில் எந்த மர்மமும் இல்லை என்பதால், இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டியதும் இல்லை. இதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேணடும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்கவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘சசிபெருமாள் மர்ம மரணம் நடந்தவுடன், சம்பவ நடந்த இடத்துக்கு சென்ற முதல் நபர் என்ற அடிப்படையில், இந்த வழக்கில் என்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்கவேண்டும்‘ என்றார்.
இதனை ஏற்றுக் கொண்டு நீதிபதி, விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications