அரசியலிலிருந்து நிரந்தரமாக ஓய்வு பெற வைகோ முடிவு?
புழல் சிறையில் இருந்து கொண்டு அறிக்கை மூலம் அரசியல் நடத்தும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விரைவில் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: புழல் சிறையில் இருந்து அறிக்கைகள் மூலம் அரசியல் நடத்தி வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விரைவில் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற நூல் வெளியிட்டு விழாவில் பங்கேற்று பேசிய வைகோ, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என அவர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தேச துரோக வழக்கு
நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3ஆம் தானாகவே முன்வந்து நீதிமன்றத்தில் ஆஜரானார் வைகோ. வழக்கை விரைந்து முடியுங்கள் அல்லது என்னைச் சிறையில் அடையுங்கள் என நீதிபதியிடம் கேட்டார். நீதிபதியும் உடனே வைகோவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
புழலில் வைகோ
இதனையடுத்து உடனடியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டார் வைகோ. 'என்னைப் பார்க்க கட்சிக்காரர்களோ, நண்பர்களோ சிறைக்கு வர வேண்டாம். நான் சிறைக்குச் செல்வதைக் கண்டித்து யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். அப்படி ஈடுபட்டால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பேட்டி கொடுத்தார்.
40 நாட்களுக்கு மேலாக சிறை
எல்லோரும் கருவேல மரங்களை வெட்டும் பணியில் ஈடுபடுங்கள் என அந்த நேரத்தில் சொல்லிவிட்டுத்தான் ஜெயிலுக்குப் போனார். 15 நாட்கள் முடிந்த பிறகும் வைகோ வெளியே வரவில்லை. அவரது நீதிமன்ற காவல் ஜூன் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார் வைகோ.
மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள்
சமீபத்தில் புழல் சிறைக்கு சென்ற திருமாவளவன், முத்தரசன் வைகோவிடம் நீண்ட நேரம் பேசியுள்ளனர். ஜாமீனில் வெளியே வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அவரது பதில் மவுனமாகவே இருந்துள்ளது. வெளியில வரவே எனக்குப் பிடிக்கலை. அதனால்தான் உள்ளேயே இருந்து நிறைய படிக்கிறேன். அடுத்த கட்டம் பற்றி யோசிச்சுட்டு இருக்கேன் என்று சொன்னாராம்.
கவலைப்பட்ட வைகோ
1992ல் விடுதலைப் புலிகளோடு சேர்ந்து கருணாநிதியை நான் கொலை செய்ய முயற்சி பண்ணதா என் மீது பழி ஏற்பட்டது. அப்போது கூட தமிழக மக்கள் அந்தப் பழியை நம்பவில்லை. இப்போது மக்கள் நலக் கூட்டணி அமைப்பதற்காக 1200 கோடி ஜெயலலிதாவிடம் வாங்கியதாக பேசுவது எனக்கு மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கு என்றாராம் வைகோ.
கட்சியா? இயக்கமா?
மதிமுகவை தொடர்ந்து கட்சியாக நடத்துவதா அல்லது இயக்கமாக மாற்றிவிடலாமா என்று வைகோ தீவிரமாக யோசிக்கிறார். தன்னை சிறையில் சந்தித்த நெருக்கமான தலைமை நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
மதிமுக பிறந்தநாள்
மே 6ஆம் தேதி மதிமுகவின் பிறந்தநாள். வைகோ சிறையில் இருப்பதால் இந்த ஆண்டு விமரிசையாக யாரும் கொண்டாடவில்லை. தொண்டர்களும் உற்சாகமிழந்தே காணப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் வைகோவின் முடிவு மதிமுக தொண்டர்களை மேலும் சோர்வடைய செய்துள்ளதாகவே தெரிகிறது.
அரசியல் ஓய்வு
வைகோவை நேரில் சந்தித்து பேசிய முக்கிய நிர்வாகிகள் சிலர், புழல் சிறையில் இருந்து அறிக்கை வெளியிடுங்கள் என்று கூறியதை அடுத்தே இப்போது அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறாராம் வைகோ. ஆனாலும் மனரீதியாக அவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது என்கின்றனர் வைகோவிற்கு நெருக்கமானவர்கள்.