வைகோவின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது... மறுபரிசீலனை செய்யவேண்டும்: மநகூ தலைவர்கள் கோரிக்கை
சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று வைகோ அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது திரும்ப பெறவேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் முத்தரசன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேமுதிக, மக்கள நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், மதிமுக தலைவருமான வைகோ இன்று கோவில்பட்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கண்ணபிரானிடம் வைகோ இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வேட்பாளராக விநாயகா ரமேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பிரச்சார வாகனத்தில் ஏறி பொதுமக்கள், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 2016 சட்டசபைத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்தார். வைகோவின் அறிவிப்பு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியிலும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து கூறியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதேபோல் விசிக தலைவர் தொல். திருமாவளவன், தனது கருத்தில், அண்ணன் வைகோ அவர்களின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார். அண்ணன் வைகோ இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும், அவர் வெற்றி பெற வேண்டும், அவரது குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நான்குபேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் என்பதற்காக தேர்தலில் போட்டியிடாமல் விலகக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், வைகோ போட்டியிடுவதா, வேண்டாமா என்பதை அவர்தான் முடிவெடுக்க வேண்டும். இது அவருடைய தனிப்பட்ட முடிவு. இதற்காக கூட்டணி தலைவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்றும் கூறினார்.
இரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே சாதி மோதல் ஏற்படக்கூடாது என்பதற்காகவே வைகோ இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை விட சமூக ஒற்றுமைதான் முக்கியம் என்று வைகோ நினைத்துள்ளார் என்றும் முத்தரசன் தெரிவித்துள்ளார். எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று கூறிய முத்தரசன், தனது தனிப்பட்ட முடிவை கூட வைகோ தனியாக எடுப்பதில் எந்த தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார் .
இதேபோல தமாகாவின் மூத்த தலைவர் ஞானதேசிகனும் வைகோவின் முடிவு தனக்கு அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். வைகோ தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், அவரது முடிவை மறுபரிசீலனை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.