பட்டாசு தொழிலை அழிக்க துடிக்கும் மத்திய அரசு: வைகோ கண்டனம்!
சென்னை: மத்திய காங்கிரஸ் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் பட்டாசுத் தொழில் அழிந்து போய்விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. தற்போது 27 மடங்கு கட்டணத்தை உயர்த்தி பட்டாசுத் தொழிலுக்கு பேராபத்தினை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''விருதுநகர் மாவட்டத்திற்கு உலகப் புகழைப் பெற்றுத் தரும் தொழிலாக சிவகாசி பட்டாசுத் தொழில் விளங்கி வருகிறது. ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்களுக்கு ஒரே வருவாய் ஈட்டும் தொழிலாக இப்பட்டாசுத் தொழில் விளங்கி வருகிறது.
மத்திய காங்கிரஸ் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் பட்டாசுத் தொழில் அழிந்து போய்விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. புதிய வரிகளும் அதிகாரிகளின் தொல்லையும், அலைக்கழிப்பும், சீனப் பட்டாசுகளின் இறக்குமதி அச்சமும் இத்தொழிலுக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி ஆகும்.
இத்தகைய கடும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற தொழிலை அடியோடு ஒழித்துவிடும் முயற்சியாக தற்போது மத்திய அரசு புதிய ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பட்டாசு இருப்பு வைக்கும் கிட்டங்கிக்கு, இருப்பு அறைகள் 2 லட்சம் கிலோ அளவு கொண்ட பட்டாசுகளை இருப்பு வைத்திட ஆண்டுக் கட்டணமாக 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்ததை தற்போது 4 லட்சம் ரூபாயாக உயர்த்தி உள்ளனர். இது 27 மடங்கு உயர்வாகும்.
இப்படி அநியாயமாக உயர்த்துவது குறித்து பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள எந்த சங்கங்களையும் வழக்கத்தில் உள்ள நடைமுறையின்படி ஒரு மரபுக்காகக்கூட கலந்து ஆலோசனை செய்யவில்லை.
அதோடு எவ்விதக் கட்டண உயர்வும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு ஆட்சேபணை எதுவும் இருப்பின் தெரிவிக்கலாம் என 45 நாட்களுக்கு முன்பு வழங்கப்படும் நோட்டீசு கூட வழங்காமல் எதேச்சதிகாரமாக கிட்டங்கிக் கட்டணத்தை 27 மடங்கு உயர்த்தி பட்டாசு தொழிலை நசுக்கிட முயற்சிக்கும் மத்திய அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அதேபோல், பரிசோதனைக் கட்டணம் 300 ரூபாய் என்று இருந்ததை 10 ஆயிரம் ரூபாயாக 33 மடங்கு உயர்த்திய கொடுமையையும் மத்திய காங்கிரஸ் அரசு அரங்கேற்றி உள்ளது.
இப்படி பட்டாசு தொழிலை அழிவின் விளிம்பில் தள்ளிய மத்திய அரசின் கொடுமைக்கு முடிவு கட்டுவோம். நடைபெற இருக்கின்ற 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னார், மே திங்கள் நரேந்திர மோடி தலைமையில் அமையப்போகும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இக்கட்டண உயர்வுகளை ரத்து செய்யும் என்பதோடு, பட்டாசுத் தொழிலை முழுமையாகப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்வேன் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications