மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருத மொழி திணிப்புக்கு வைகோ கண்டனம்
சென்னை: மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருதத்தை 3-வது மொழியாக திணிக்கும் முயற்சிக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவின் பன்முகத்தன்மையை அழித்து, ஒற்றை இந்து கலாச்சார நாடாக மாற்றவும், சமஸ்கிருத இந்தி மயமாக்கவும் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து முயற்சித்து வருகிறது. நரேந்திர மோடி தலைமையில் 2014 இல் பா.ஜ.க. அரசு அமைந்த பின்னர், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது கொள்கைகளை நிலை நாட்ட ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

நாடெங்கும் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுமாறு உத்தரவிட்டதும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கற்பிக்கப்படும் ஜெர்மனி மொழியை அகற்றிவிட்டு, மூன்றாவது பாடமாக சமஸ்கிருதம் கற்றுத்தருமாறு ஆணை பிறப்பித்ததும், ஆசிரியர் தினத்தை ‘குருஉத்சவ்' என்று பெயர் மாற்றியதும், சமஸ்கிருத மொழியை முன்னேற்றுவதற்கு சமஸ்கிருத துறைகள் இல்லா மத்திய பல்கலைக் கழகங்கள் அத்துறைகளைத் தொடங்குமாறு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி வலியுறுத்தியதும், மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆர்.எஸ்.எஸ். காட்டிய பாதையில் பயணித்து வருவதை உறுதி செய்கின்றன.
இந்நிலையில், 2016 -2017 கல்வி ஆண்டியிலிருந்து மத்திய அரசுப் பள்ளிகள் அனைத்திலும் சமஸ்கிருத மொழிதான் மூன்றாவது பாடமாக கற்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கற்றுக்கொடுக்கவும், சமஸ்கிருத வேதங்களை ஒரு பாடமாக வைக்கவும், ‘வேதிக் போர்டு' என்று சிறப்பு வேதப்பாடப் போதனை தனிப்பிரிவு ஜூன் 16-ந் தேதி முதல் மத்திய அரசுப் பள்ளிகளில் தொடங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளது கண்டனத்துக்குரியது.
பல்வேறு தேசிய இனங்கள், மொழி, பண்பாடு இவற்றின் கூட்டமைப்புதான் இந்தியா என்பதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கினால்தான் தேசிய ஒருமைப்பாடு என்பதற்குப் பொருள் இருக்கும். இல்லையேல் வேற்றுமையில் ஒற்றுமை என்பது வெற்று முழக்கமாகவே இருக்கும்.
எனவே மத்திய அரசு சமஸ்கிருதத்தை வலிந்து திணிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications