ஆதரவளித்த 'சகோதரர்' ஸ்டாலினுக்கு நன்றி.. உருகும் வைகோ
சென்னை: மலேசிய அரசு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
மலேசியாவின், பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் இராமசாமி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற வைகோ, கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவரை சுமார் 16 மணிநேரங்கள் விமான நிலையத்திலேயே வைத்திருந்து விசாரணை நடத்திய அதிகாரிகள், மலேசியாவுக்கே, வைகோ ஆபத்தானவர் என கூறி இந்தியாவுக்கு திருப்பியனுப்பிவிட்டனர்.

முன்னாள் எம்.பி
வைகோ ஒரு கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர் என்பதையெல்லாம் தாண்டி, அவர் இந்திய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினராகும். முன்னாள் எம்.பிக்குரிய சலுகைகள் அனைத்தும் வைகோவுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அப்படியிருக்கும்போது மலேசிய அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணன் என்ற ஸ்டாலின்
வைகோவை இவ்வாறு தடுத்து நிறுத்தியது குறித்த தகவல் ஊடகங்களில் வெளியானதும், அண்ணன் வைகோ என்று குறிப்பிட்டு, ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், வைகோவுக்கு நேர்ந்த பிரச்சினைக்காக கண்டனம் தெரிவித்திருந்தார். அரசியலில் இரு துருவங்களாக உள்ளநிலையில், வைகோவுக்காக ஸ்டாலின் பரிந்து அறிக்கை வெளியிட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்பட்டது.

பதில் மரியாதை
இந்த நிலையில், மலேசியாவில் அனுமதி மறுக்கப்பட்டது குறித்து வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஸ்டாலினை சகோதரர் என குறிப்பிட்டார்.

நெகிழ்ச்சி
வைகோ கூறியதாவது: எதிலும் ஒரு நன்மை உண்டு. நான் ஒன்றும் பெரிதாகப் பத்து மாதங்களோ ஓராண்டோ சிறையில் இருக்கவில்லை. ஒரு 16 மணி நேரம உட்கார வைத்து இருந்தார்கள். ஆனால் அதற்காகத் தமிழகத்தின் அனைத்துக்கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்ததால் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கினறேன்.

சகோதரர் ஸ்டாலின்
அஇஅதிமுக சார்பில் நாடாளுமன்ற மக்கள் அவைத்துணைத்தலைவர் மு.தம்பிதுரை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் சகோதரர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் சகோதரர் திருநாவுக்கரசர், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சகோதரி தமிழிசை சௌந்தர்ராஜன், எச். ராஜா, தமிழர் தேசிய அமைப்பின் தலைவர் அண்ணன்பழ.நெடுமாறன், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி.,தேமுதிக தலைவர் சகோதரர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் இப்படிப் பல தலைவர்கள் என்னை இதுபோன்று நடத்தியது முறையில்லை என்று கண்டித்து அறிக்கை கொடுத்தற்கு அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications