”பூலோக வைகுண்டம்” ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது- குவிந்த பக்தர்கள்!
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தின் வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு ரங்கநாதர் கோயிலில் இன்று சொர்க்க வாசல் கோலாகலமாக திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி விழாக்கள் முக்கிய வைணவ திருத்தலங்கள் அனைத்திலும் நடைபெற்றாலும் பூலோகமான ஸ்ரீரங்கத்தில் தான் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த முதல் வைபவம் என்பதால் ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் புராதனமாக கருதப்படுகிறது.
திருநெடுந்தாண்டகத்தை தொடர்ந்து நடைபெற்ற பகல் பத்து உற்சவங்களில் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பரமபத வாசல் திறப்பு:
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் இன்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதற்காக இன்று அதிகாலை 3.45 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் நம்பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்தில் பாண்டியன் கொண்டை, கிளி மாலை அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்பட்டார்.

ஆயிரங்கால் மண்டபம்:
பரமபதவாசலை கடந்து திருக்கொட்டகையில் பிரவேசித்த நம்பெருமாள், திருமாமணி மண்டபம் என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தை சென்றடைந்தார். ஆயிரங்கால் மண்டபத்தில் சாதரா மரியாதை, அலங்காரம் அமுது செய்வதை தொடர்ந்து காலை 8.15 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்யலாம்.

இரவு வரை திறந்து இருக்கும்:
இன்று இரவு 10 மணி வரை பரமபத வாசல் திறந்து இருக்கும். நாளை முதல் வருகிற 26 ஆம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும் பரமபதவாசல் திறந்து இருக்கும். 27 ஆம் தேதி மாலை 4.15 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்து இருக்கும். ராப்பத்து உற்சவத்தின் எட்டாம் நாளான 28 ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அன்றைய தினம் பரமபதவாசல் திறப்பு கிடையாது.

குவிந்திருந்த பக்தர்கள்:
31ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், மறுநாள் இயற்பா நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவில் கலந்து கொண்டு சொர்க்கவாசல் திறப்பின்போதோ அல்லது நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்து சென்ற பின்னரோ சொர்க்கவாசல் வழியாக சென்றால் நம்மாழ்வாரை போன்று வைகுண்ட பதவியை அடையலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications