முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த பாஜக வானதி சீனிவாசன் - அணைகளை தூர் வார கோரிக்கை
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் சந்தித்து பேசினார். அணைகளை தூர்வார கோரிக்கை வைத்தார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் சந்தித்து பேசினார். அப்போது அணைகளை தூர்வாரவும், அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றவும் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் அவினாசி அத்திக்கடவு திட்டப்பணிகளை நிறைவேற்றக்கோரி பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மாநிலத்தில் இருந்த எந்த பாஜக தலைவர்களும் இது தொடர்பாக முதல்வரை சந்தித்ததும் இல்லை, பேசியதும் கிடையாது.
இப்போது எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியேற்ற பின்னர் மாநில பாஜக தலைவர்கள் பல கோஷ்டிகளாக பிரிந்து பேட்டி தருகின்றனர். பொன். ராதாகிருஷ்ணன் தனது பேட்டியில் அதிமுக அழிந்து விடும் என்று கூறுவார்.
அதே நேரத்தில் மாநில தலைவர் தமிழிசையோ, தமிழகத்திற்கு விரைவில் பொது தேர்தல் நடைபெறும் என்று பேட்டி கொடுப்பார். இதுநாள் வரை அமைதி காத்து வந்த வானதி சீனிவாசனோ, முதல்வரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், கோவை மாவட்டம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்கவும், அணைகளை தூர்வாரவும் கோரிக்கை வைத்ததாக கூறினார்.
அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றி தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணவும் வலியுறுத்தினோம். சிறுவாணி அணை வறண்டு விட்டது, முதல்வர் அறிவித்துள்ள குடி மராமத்து திட்டத்தின் மூலம் அணைகளை தூர்வார கோரிக்கை வைத்துள்ளோம். தங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறியுள்ளார் என்றார்.