வண்டலூர் ரோட்டில் யாருங்க இது.. செங்கல்பட்டில் கால் வெக்க முடியல..ஆம்னி தந்த சூப்பர் ஐடியாவை பாருங்க
செங்கல்பட்டு: செங்கல்பட்டு டோல்கேட்டிலும் சுங்க கட்டணத்தை ரத்து செய்வதன் மூலம் வண்டலூர் முதல் செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்துக்கு நெரிசலை கட்டுப்படுத்தலாம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கிளாம்பாக்கத்தில் இயக்கப்படும் 2,000 சிறப்புப் பேருந்துகளையும் சேர்த்து மொத்தம் 4,167 பேருந்துகள் நேற்றுமுதல் இயக்கப்பட்டு வருகின்றன..

கிளாம்பாக்கம்: இதைத்தவிர, தங்கள் சொந்த வாகனங்களிலும் பயணித்தனர்.. கார், வேன் உள்ளிட்டவைகளையும் புக் செய்து, பயணமானார்கள். இதனால், அனைத்து வாகனங்களும் சேர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒரே நேரத்தில் வரிசைகட்டி நிற்க ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, பஸ்கள் கிளம்புவதால், வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டன.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த செங்கல்பட்டு டோல்கேட்டிலும் சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது:
முன்பதிவு: "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 28ம் தேதி, 1025 ஆம்னி பேருந்துகளில் 41,000 பயணிகள் பயணம் செய்தனர். அதேபோல, அக்டோபர் 29ஆம் தேதி, 1800 ஆம்னி பேருந்துகளில் 72,000 பயணிகள் பயணம் செய்தனர். 30ம் தேதி நேற்று 1600 ஆம்னி பேருந்துகளில் 64,000 பயணிகள் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க அரசு எடுத்துள்ள சிறப்பு நடவடிக்கைகளுக்கு மிகுந்த பாராட்டு.
கோயம்பேடு, மதுரவாயில், பூந்தமல்லி போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இன்றி பேருந்துகள் சிறப்பாக இயங்கியுள்ளன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
வண்டலூர்: எனினும், வண்டலூர் முதல் செங்கல்பட்டு டோல்கேட் வரை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மிகவும் கவலையளிக்கக்கூடியது. இரண்டு மணி நேரத்திற்கும் மேல் வாகனங்கள் தாமதமாக சென்றுள்ளதால், பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்காக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகள், நுழைவு கட்டணத்தை ரத்து செய்வது, மேலும் பேருந்துகள் உள்ளே வருவதற்கு கூடுதல் சாலைகளை அமைத்தல் ஆகிய ஏற்பாடுகள் மிகவும் முக்கியமாக இருக்கின்றன.
போக்குவரத்து நெரிசல்: மேலும், செங்கல்பட்டு டோல்கேட்டிலும் சுங்க கட்டணத்தை ரத்து செய்வதன் மூலம் வண்டலூர் முதல் செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்துக்கு நெரிசலை கட்டுப்படுத்தலாம். இந்த முயற்சிகள் பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு உதவியாக இருக்கும். ஆகையால் அரசு இதற்கு தக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே இன்று காலையிலிருந்து கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பகுதி காலியாகிவிட்டது.. நெரிசல் என்பது கொஞ்சமும் இல்லாமல், இயல்பாகவும், அமைதியாகவும் காணப்பட்டு வருகிறது. வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகை தினத்தன்றுகூட, தாம்பரம்,பெருங்களத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். ஆனால், நேற்று இரவு கடும்கூட்டத்தால், திக்குமுக்காடிய கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு, தற்போது நெரிசலின்றி காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications