நெருங்கும் வர்தா புயல்.. கடலூர், நாகை துறைமுகங்களில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வர்தா புயல் நெருங்கி வருவதால் கடலூர், நாகை துறைமுகங்களில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர்: வர்தா புயல் நாளை தெற்கு ஆந்திரா மற்றும் சென்னைக்கு இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 450 கிமீ தொலைவில் வர்தா புயல் மையம் கொண்டிருக்கிறது. இந்தப் புயல் நாளை தெற்கு ஆந்திரா மற்றும் சென்னை அருகே கரையை கடக்க உள்ளது. இதனால், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்களில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் நாளை கரையை கடக்க உள்ளதால் வட தமிழக மாவட்டங்களில் கன மழை இருக்கும் என்றும், இதனால் வட தமிழக கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வர்தா புயலின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர் பகுதியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.