புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு அம்பேத்கர் சுடர் விருது - திருமாவளவன்
2017-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு வழங்கப்படுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் விவரங்களை திருமாவளவன் இன்று வெளியிட்டார். அம்பேத்கர் சுடர் விருது புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருது வழங்கும் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அம்பேத்கரின் 127வது பிறந்தநாளையொட்டி கோயம்பேட்டில் உள்ள அவரது உருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்த ஆண்டுக்கான விருது நிகழ்ச்சி பற்றி அறிவித்தார்.
2017ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு வழங்கப்படுகிறது. பெரியார் ஒளி விருது ஓவியாவுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது கவிஞர் கலி பூங்குன்றனுக்கும் வழங்கப்படும் என்று திருமாவளவன் கூறினார்.
காமராசர் கதிர் விருது ஹென்றி தியாகராசனுக்கும், காயிதே மில்லத் பிறை விருது மவுலவி தர்வேஷ் ரஷாதிக்கும், செம்மொழி ஞாயிறு விருது இளங்குமரனாருக்கும் வழங்கப்படுகிறது. விருதுகள் வழங்கும் விழா மே 4ஆம் தேதி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது என்று திருமாவளவன் தெரிவித்தார்.