பீகார் குண்டுவெடிப்பை சுட்டிக்காட்டி... மோடியின் சென்னை கூட்டத்திற்கு தடை கோரி வழக்கு
சென்னை: பாதுகாப்புக் காரணங்களுக்காக சென்னையில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை, வண்டலூரில் வரும் 8ஆம் தேதி பா.ஜ.க சார்பில் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக மோடியின் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாட்டின் பிரதமர் என்பவர் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார். ஆனால், இந்த தேர்வுக்கு முன்னதாகவே பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான் என்று அறிவித்துக் கொண்டு ஊர் ஊராக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
இவர், பீகாரில் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் குண்டுவெடித்தது. இதனால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டது. சென்னையில் மோடி கலந்து கொள்ளும் வண்டலூர் பகுதியும் பதற்றமான பகுதி. போக்குவரத்து நிறைந்த பகுதி. தேசிய நெடுஞ்சாலையையொட்டி பகுதியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதனால் சமூக மோதலுக்கு அதிக வாய்ப்பு ஏற்படுமோ என அஞ்சுகிறோம்.
எனவே இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இத்தகவலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளர் பொறியாளர் எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்த மனு, இன்று தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி ரவிச்சந்திரபாபு ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட இருக்கிறது.