மாட்டுக்கறிக்காக உயிரை கொடுப்போம்.. ஓடும் ரயிலை மறித்த 'சிறுத்தைகள்'.. புதுவையில் பரபரப்பு
மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பதை கண்டித்து, புதுவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு தரப்பில் இருந்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை என்றாலும் மதுரை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் சமூக இயக்கத்தினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம்
இந்நிலையில், இன்று புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். 50க்கும் மேற்பட்ட விசிகவினர் புதுச்சேரி ரயில் நிலையத்தில் ஒன்று கூடினர்.
ஓடும் ரயிலை மறித்து…
அப்போது, புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வரும் புதுச்சேரி சென்னை பயணிகள் ரயிலை விடுதலை சிறுத்தைகள் மறித்தனர். ஓடும் ரயிலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்ப்பு கோஷம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயிலை மறித்த போது, மாட்டிறைச்சிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார்கள். மத்தியில் ஆளும் பாஜகவின் பண்பாட்டு அழிப்பு நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.
கைது
இதனைத் தொடர்ந்து, ரயில் மறியலில் ஈடுபட்ட விசிகவினரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்திருக்கிறார்கள். அனைவரும் மாலை விடுவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.