நெல்லை: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி படுகொலை- போலீஸ் குவிப்பு
நெல்ல:நெல்லை மேலப்பாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர இளைஞரணி அமைப்பாளர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மேலப்பாளையம் கணேசபுரத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெல்லை மாநகர இளைஞரணி அமைப்பாளராகவும் இருந்தார். மேலும் வட்டிக்கு பணம் கொடுத்து தொழில் செய்து வந்தார்.

ஜெயமோகன் மாலை நேரங்களில் மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். இந்த நிலையில் ஞாயிறன்று இரவு 8 மணி அளவில் ஜெயமோகன் பங்களப்பா தெருவில் உள்ள சலூன் கடை அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அரிவாளுடன் அங்கு வந்த இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சராமரியாக வெட்டினர். பின்னர் இருவரும் அரிவாளை அங்கேயே வீசி விட்டு தப்பி ஓடினர்.
இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். படுகாயம் அடைந்த ஜெயமோகனை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் ஜெயமோகனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள், எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர்.
பாளையம்கோட்டை உதவி கமிஷனர் மாதவன் நாயர், மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து கொலை நடந்த இடம் அருகே இருந்த சலுன் கடை உரி்மையாளர் சுடலை என்பவரை போலீஸ் ஜுப்பில் அழைத்து செல்ல முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தந்தை ஜீப் முன் படுத்து மறித்தார்.
இதையடுத்து போலீசார தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications